top of page

உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறீர்களா??

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நான் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறேன் என்றார்(யோவான் 9-5!)ஆனால் இயேசு இந்த உலகத்தை விட்டு சென்ற பிறகு உலகத்துக்கு வெளிச்சமாக நம்மையே நியமனம் செய்தார்.(மத் 5-14). இதுவே உத்தம கிறிஸ்தவனுக்கு கொடுத்த பெரிய பொறுப்பாகும்.

 

இயேசு வெளிப்படுத்தின ஒளியானது சில உபதேசங்களோ போதனைகளோ புதிய உடன்படிக்கை சத்தியமோ இல்லை. தன்னுடைய ஜீவியத்தையே ஒளியாக பிரகாசித்தார். இயேசுவின் ஜீவியத்திலிருந்து தான் தெய்வீக சுபாவங்கள் ஒளியாக வீசியது. நாங்கள் வெளிச்சம் பெற்று விட்டோம் என்று பரிசுத்தாவியின் அபிஷேகத்தையும் அந்நிய பாஷை பேசுவதையும் நாம் கூறிக்கொள்கிறோம். ஆனால் மெய்யான ஒளி என்பது இயேசுவின் ஜீவியத்தையே நாம் வெளிச்சமாக பிரகாசிப்பது. புதிய ஏற்பாட்டில் இரண்டு முறை தேவனை ஒருவனும் ஒருகாலும் கண்டதில்லை என எழுதப்பட்டிருக்கிறது,முதலாவதாக தேவனை பற்றி இயேசுவே நமக்கு வெளிப்படுத்தினார்,இயேசு தன் கரங்களை குஷ்டரோகியின் தோளோடு வைத்து அணைத்து கொண்ட போது தேவன் எப்படிப்பட்டவர் என்று வெளிப்படுத்தினார்,அவர் காசுகாரர்களை ஆலயத்திலிருந்து துரத்திய போதும் தேவன் எப்படிபட்டவர் என்பதை வெளிப்படுத்தினார்.

 

இவ்வாறாக என்னை கண்டவன் பிதாவை கண்டான் என்றார். பிதாவை இயேசுவிடத்தில் சீஷர்கள் கண்டதை போலவே நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பாய் இருந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருப்பதையும் நம் சபையில் தேவன் இருப்பதையும் இன்றும் ஜனங்கள் காணமுடியும்.  சபையில் நம்முடைய நடக்கைகளை கவனித்து பார்ப்பவர்கள் கிறிஸ்து எப்படிபட்டவராக இருப்பார் என்பதை நம் மூலமாக அறிய கூடியதாக இருக்க வேண்டும். இறைக்கு ஊழியக்காரர்கள் பல பிரச்சனைகளினாலான  கருத்து வேறுபாடுகளினால் அநேகரோடு பேசிக்கொள்வதில்லை. இன்னும் அவர்கள் ஒப்புரவாகாத நிலையில் எப்படி சபை ஜனங்களை கிறிஸ்துவின் வெளிச்சத்துக்குள் நடத்த முடியும், இவர்கள் இருளில் நடக்கும் மாயமாலமான பிரசங்கிகள்.

 

அடுத்ததாக சபையின் விசுவாசிகளின் அன்பற்ற தன்மையினால் சபைக்கு வரும் புறஜாதி ஜனங்கள்  கிறிஸ்துவின் வெளிச்சத்தை பெற்று கொள்வதில்லை. இயேசுவின் ஜீவனை நாம் வெளிச்சமாக பிரதிபலிக்க தவறியிருந்தால் நம்முடைய பிரதான அழைப்பிலிருந்தே தவறிவிட்டோம்.

 

அடுத்ததாக, இயேசுவின் மரணத்தை நம்முடைய சரீரங்களில் சுமந்தால் மாத்திரமே இயேசுவின் ஜீவனை நாம் வெளிப்படுத்த முடியும். அதாவது தன் சுயத்தை சிலுவையில் அறைய ஒப்பு கொடுத்தவன் தான் கிறிஸ்துவின் ஜீவியத்தை உலகத்துக்கு வெளிச்சமாக காண்பிப்பான். ஆமென்,

bottom of page