அழைப்பில்லாமல்,தகுதியில்லாமல் ஊழியம்!!
ஊழியம் செய்கிறவர்களே...நீங்கள் சாட்சியாய் வாழாததினால் உங்களால் அநேகர் இடறலடைகிறார்கள்.
அப்போஸ்தல நடபடிகள் 26-16 ல் உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்தியதற்காகவும் உனக்கு தரிசனமானேன் என்று கர்த்தர் சொல்கிறார்.
1 தேசலோ னிக்கேயர் 3-10 ல் விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின் மையாக நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி தேவனும் சாட்சி.
தேவனுக்கு முன்பாக நீ சாட்சியாய் இருக்க வேண்டும். ஜனங்களுக்கு முன்பாகவும் நீ சாட்சியாக இருக்க வேண்டும்.
பவுல் இப்படியாக சொல்கிறார். கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம். 2 கொரிந்தியர் 8:21
யார் கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் பண்ணுவான் யார் அவருடைய கூடாரத்தில் தங்குவான். உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. சங்கீதம் 15:2
கெர்சிக்கிற சிங்கம் போல பிசாசானவன் எவனை விழுங்கலாம் என்று வகை தேடி சுற்றி திரிகிறான்.ஏன் இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் பிசாசின் பிடியிலே அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.? தானியேல் சிங்கத்தின் வாய்க்கு தப்புவிக்கப்பட்டான்.
தானியேல் ராஜாவைப் பார்த்து இப்படியாக சொல்கிறான்..
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்.ஏனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன். ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான். தானியேல் 6:22
இன்றைக்கு நீதியின் மேல் பசித்தாகம் உள்ளவர்கள் மேலும் நீதியி னிமித்தம் துன்பப்படக்கூடிய ஊழியக்காரர்கள் இல்லை. வசனத்தை போதிக்கிறார்கள் ஆனால் அந்த வசனத்திற்கு தாங்களே கீழ்ப்படிகிறதில்லை. உத்தமமாய் நடக்கிறவர்கள் இல்லை. தகுதி என்கிற சர்வாயுதவர்க்கம் இல்லை.அதனால் தான் இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் பிசாசின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். பிசாசு அவர்களை தேவ சித்தத்துக்கு விலக்கிகொண்டு போய் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்க வைத்து நித்திய ஜீவனை இழந்து போக செய்கிறான்.
ஊழியம் செய்கிற அநேகர் தேவ சித்தத்தை செய்யாததினால் நித்திய ஜீவனை இழந்து போகிறார்கள்.
ஊழியம் செய்கிறவர்களே.. வசனத்தை போதிக்கிறவர்களே முதலாவது உங்களை தேவனுக்கு முன்பாக உத்தமனாய் நிறுத்துங்கள்.
நீ வெட்கபடாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 2 தீமோத்தேயு 2:15
ஊழியக்கார்களே..நீங்கள் போதிக்கிற வசனத்துக்கு கீழ்படிந்து நடந்தால் தான் உங்களுக்கு இரட்சிப்பு.
உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய். 1 தீமோத்தேயு 4:16
என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. யாக்கோபு 3:1
சமீபத்தில் ஒரு சபையில் ஊழியம் செய்ய வாய்ப்பு தரவில்லை என்று சிலர் எழும்பி அந்த சபையை உடைத்து விட்டார்கள். அந்த சபை உடைந்து சின்னா பின்னமாகிவிட்டது.
பிரியமானவர்களே ஊழியம் என்பது பிசாசின் ராஜ்யத்திற்கு எதிரான ஒரு யுத்தம் இருளின் அந்தகார வல்லமைகளுக்கு எதிரான போராட்டம்.
துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எபேசியர் 6:12
தேவனுடைய வல்லமை என்கிற அதிகாரம் இல்லாமல், தகுதி என்கிற சரவாயுதவர்க்கம் இல்லாமல் ஊழியம் செய்யாதீர்கள்.
ஊழியம் செய்துவிட்டு நரகத்துக்கு போவதை விட ஊழியம் செய்யாமல் பரலோகத்துக்கு போவது நலமாய் இருக்கும்.
பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து சாட்சிகளாய் இருப்பீர்கள் என்று இயேசு சொன்னார். மேலும் அவர்களது, கனிகளினால் அவர்களை அறிந்து கொள்ளுங்கள் என்று இயேசு குறிப்பிட்டார்.ஊழியம் செய்து சரீரத்தை சுட்டெரிக்க கொடுத்தாலும், அன்பு என்கிற கனி இல்லாவிட்டால் ஒரு பிரயோஜனமில்லை.
பல ஊழியக்காரர்களிடம் இருப்பது கனியற்ற அந்தகார கிரியைகள். ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். மத்தேயு 21:43
பல ஊழியக்காரர்கள் தங்கள் பொல்லாத சுபாவத்தினாலே கட்டப்பட்டு இருக்கிறார்கள்.அவர்களுக்கே விடுதலை தேவையாயிருக்கிறது.இத்தகயவர்கள் இயேசு சொன்னது போல் குருடருக்கு வழிக்காட்டும் குருடராயிருக்கிறார்கள்.
மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 12:11
வசனத்திற்கு கீழ்ப்படிந்து சாட்சியாய் வாழும்போது தான் பிசாசை நாம் மேற்கொள்ள முடியும். தேவனுக்கு கீழ்ப்படிந்து பிசாசை துரத்தும் போது தான் பிசாசு ஓடிப்போவான்.
தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்ட ஓடிப்போவான். யாக்கோபு 4:7
இன்றைக்கு தேவனுடைய வசனத்துக்கு கீழ்படியாமல் பிசாசுக்கு எதிர்த்து நிற்கிற பல ஊழியக்காரர்கள் பிசாசின் வலையில் அகப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
பிசாசு இன்றைக்கு அநேகரை வீண் புகழ்ச்சி என்கிற மாய வலைக்குள் கட்டி வைத்திருக்கிறான். தேவன் எதிர்க்கும்பெருமையினால் அநேக ஊழியக்காரர்கள் தங்களை அறியாமல் வீழ்ந்து போனார்கள்.சாத்தான் எப்படி வீழ்ந்தானோ அதே பெருமை என்கிற ஆயுத்தை ஊழியக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறான்.
இந்த கடைசி நாள்களில் பிரசங்க பீடத்திலும் இணைய தளங்களிலும் மனித புகழ்சியை நாடி பெருமை பேசக் கூடிய ஊழியக்காரர்களை பகுத்தறியுங்கள். மேலும் அவர்களை விட்டு விலகி இருங்கள்
தேவன் உங்களுக்கு செய்த நன்மைகளுக்கு பதிலாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் முதலாவது தேவன் உங்களுக்கு கொடுத்த இரட்சிப்பை காத்துக் கொள்ளுங்கள்.உங்கள் இரட்சிப்பு நிறைவேற பயத்தோடும் நடுக்கத்தோடும் பிரயாசப்படுங்கள்.
அழைப்பில்லாமல்,தகுதியில்லாமல் ஊழியம் செய்து அதிக ஆக்கினையை அடைந்து விடாதீர்கள்.