top of page
sign of anti Christ_edited.jpg

அந்தி கிறிஸ்துவின் அடையாளம்

"பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்தி கிறிஸ்து." (1 யோவான் 2:22)

சத்தியத்தில் உபதேசத்தில் நீங்கள் ஒன்றாக இருங்கள். ஆனால் துர் உபதேசத்திற்கு கண்டிப்பாக எதிர்த்து நில்லுங்கள். குறிப்பாக பிதாவை மறுதலித்து இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிற ஒன்லி ஜீசஸ் (Only Jesus) துர் உபதேசத்தையும் யெகோவா சாட்சிகள் (Jehovah's Witnesses) என்கிற இயேசுவை மறுதலிக்கிற கூட்டத்திற்கும்  எதிர்த்து நில்லுங்கள். கிறிஸ்தவத்தை பழித்து பேசினால் போராடுகிறீரகளே, ஆனால் கிறிஸ்தவ அடிப்படை உபதேசத்தையே புரட்டுகிறவர்களுக்கு எதிராக ஏன் போராடாமல் மௌனமாக இருக்கிறீர்கள், பலரை வஞ்சிக்கும் இத்தகய உபதேசங்கள் பரவாமல்  தடுக்க ஏன் முயற்சிப்பதில்லை.

ஏன் இந்த துர் உபதேசமாகிய அந்தி கிறிஸ்துவின் உபதேசங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை முதலாவது பார்க்கலாம்.

(பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.  1 யோவான் 5:7.  பிதா,குமாரன் பரிசுத்த ஆவியானவரை மறுதலிப்பது அந்திகிறிஸ்துவின் உபதேசம். பிதாவையோ அல்லது குமாரனையோ மறுதலித்தால் அவர்களுக்கு நித்திய ஜீவன் இல்லை என்று வேதம் எச்சரிக்கிறது.

யோவான் 5-24 ன் படி என் வசனத்தை கேட்டு என்னை அனுப்பினவரை(பிதாவாகிய தேவனை) விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று இயேசு சொன்னார்.இந்த வசனத்தின் படி பிதாவாகிய தேவனை மறுதலிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் இல்லை.

அடுத்தது, யோவான் 4-36 ன் படி குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய
ஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.  யோவான் 3:36

அடுத்ததாக, யோவான் 14-1 ல்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். என்னிடத்திலும் விசுவாசம் ஆயிறுங்கள் என்று சொன்னார். இந்த Jesus only மற்றும் யகோவா சாட்சிகளும்,கள்ள உபதேசத்தை துணிகரமாக போதித்து பலரை வஞ்சித்து பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் மேல் உள்ள விசுவாசத்திலிருந்து ஜனங்களைதிருப்புகிறார்கள். 

மேலும், ஜனங்களை வஞ்சித்து கேட்டுக்கேதுவான வேத புரட்டுகளை உபதேசித்து நித்திய ஜீவனுக்கு போகாதபடிக்கு தடை பண்ணுகிறார்கள் என்கிற உண்மையை அறிந்து கொள்ளுங்கள். கடைசி காலத்தில் கள்ள தீர்க்கதரிசிகள் உங்களுக்குள் இருப்பார்கள். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.  யோவான் 20:31

தேவ ஆவியினாலே எழுதப்பட்ட வேத வசனங்களுக்கு எதிராய் பேசி இந்த வசனங்களை மறுதலிக்கிற கள்ள உபதேசிகளை உங்கள் சபையில் பயன்படுத்தி அவர்களுடைய துர்கிரியைகளுக்கு பங்கு உள்ளவர்களாய் மாறாதீர்கள்.


ஜனங்கள் வஞ்சிக்கப்படுவதற்கு நீங்கள் காரணமாக இருக்காதீர்கள். பரிசுத்த யோவானால் எழுதப்பட்ட இந்த வசனங்களை கவனமாக படியுங்கள். அந்த ஜீவன் வெளிப்பட்டது. பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக் குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.  1 யோவான் 1:2

நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம். எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.  1 யோவான் 1:3,  பவுல், பிதாவையும் குமாரனையும் பற்றி சொல்லுவதை கவனமாக படியுங்கள். நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்டைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக.  1 தெசலோனிக்கேயர் 3:11,  என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்:  யோவான் 6:44, என்று இயேசு சொன்னார் 1 யோவான் 2 -23 இல் சொல்லப்பட்ட பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து என்பதை புரிந்து கொண்டீர்களா?  வேதாகமத்தில் சொல்லப்பட்ட தெய்வத்துவத்தின் முப்பரிமாணமான பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரை மறுதலித்து அவர்களுக்கு எதிராக பொய்யாய் உபதேசிக்கிற இவர்கள் சத்தியத்துக்கு விரோதமாய் பொய் பேசுகிற பொய்யர்கள்.

வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும். லூக்கா 16:17, நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள். கிறிஸ்து தேவனுடையவர்.  1 கொரிந்தியர் 3:23

"ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்." - 2 கொரிந்தியர் 11:15

தெய்வத்துவத்தையே துணிகரமாக மறுதலிக்கும் கள்ள உபதேசத்தை போதிக்கிறவர்கள் துர்கிரியைகளுக்கே பங்கு ள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களினாலே பலர் வஞ்சிக்கப்படுகிறார்கள். அவர்களினாலே தெய்வீக மார்க்கம் தூசிக்கப்படுகிறது. அவர்கள் வேதப் புரட்டர்களாக இருக்கிறார்கள். வேதப் புரட்டர்களை விட்டு விலகு என்று வேதாகமம் எச்சரிக்கையில்,கள்ள உபதேசத்தை போதிக்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களோடு ஊழியம் செய்கிற நீங்களும் அந்த துர்க்கிரியைகளுக்கு பங்குள்ளவர்களாய் மாறி போகிறீர்கள்.

"வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்ன பின்பு அவனைவிட்டு விலகு." - தீத்து 3:10, அப்படிப்பட்ட உபதேசத்தை போதிக்கிறவர்கள் சாபத்துக்கு உட்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

"நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்." - கலாத்தியர் 1:8,  அப்படிப்பட்ட சாபத்துக்கு நீங்கள் உடன் பங்காளியாகாதீர்கள். தேவன் உங்களுக்கு கொடுத்த ஊழியத்தில் நிலைத்திருங்கள். அதை உண்மையாக செய்யுங்கள்.

"முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்." - கலாத்தியர் 1:9

"உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்." (2 யோவான் 1:8).

ஒருவன் தேவன் சொன்ன உபதேசத்துக்கு மாறாக வேறு உபதேசத்தை போதிக்கிறான் என்றால் அவன் தேவனுடைய உபதேசத்தையும் தேவனுடைய நியமங்களையும் மறுதலிக்கிறவனாய் இருக்கிறான். அதாவது தேவனுடைய வசனத்தை தள்ளி விடுகிறவனாய் இருக்கிறான். அதை தான் இயேசு கிறிஸ்து எச்சரித்து சொல்லியிருக்கிறார்.

"என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." (யோவான் 12:48).

"கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்." (2 யோவான் 1:9).

"ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்." (2 யோவான் 1:10).

வஞ்சிக்கிற கள்ள உபதேசத்தை பேசுகிறவர்களை நீங்கள் பகுத்தறிந்து கொள்ளுங்கள். அவர்கள் வேதாகமத்தை தியானிக்க மாட்டார்கள்.  வேதாகமத்தில் இருப்பதெல்லாம் அவர்கள் கற்றுக்கொண்ட பொய்யான  உபதேசத்துக்கு எதிரானது. அது தான் வழியும் சத்தியமும். அது அவர்களை உருவ குத்தும். மேலும் பெரும்பாலும் அவர்கள் தங்களுக்கு கற்பிக்கப்பட்ட வஞ்சிக்கிற  உபதேசத்தையே இணைய தளங்களில் படித்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கென்று  இணையதளத்தில் ரகசியமான Net work இருக்கிறது.அதன் மூலமாக அவர்கள் போதிக்கப்படுகிறார்கள்.  இவர்களிடம் கேள்வி கேட்டால், வேதாகமத்தை திறந்து எதற்கும் பதில் சொல்வதில்லை. நீங்கள் அவர்களிடம் கேள்வி கேட்கும் போது கடைசியில் கோபமடைந்து உங்களை தூசித்து அவமானப்படுத்துவார்கள். இவர்கள் தேவனால் அழைக்கப்பட்ட ஊழியக்காரர்களை துணிகரமாக தூசிக்கிறார்கள்.  இவர்களிடம், எனக்கு தான் எல்லாம் தெரியும் என்கிற பெருமை இருக்கும். மேலும் இந்த பெருமையினால் பல ரகசிய பாவங்களுக்கு அடிமையாக இருப்பார்கள். இவர்களை நன்றாக கவனித்து பாருங்கள். இவர்கள் குறி வைப்பது வாலிபர்களையும் மற்றும் பண பலம் உள்ளவர்களை மாத்திரமே. இவர்களில் பலர் ஜெபிப்பதே இல்லை. அதே மாதிரி அந்நிய பாஷை பிசாசின் அடையாளம் என்று பரிசுத்த ஆவியின் வரங்களுக்கும் பரிசுத்த ஆவிக்கும்  அவர்கள் எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் வேத வசனத்தை அழகாக பிரசங்கிப்பார்கள். மேலும்  அதனோடு கூட துர் உபதேசத்தையும் விதைத்து விட்டுப் போய்விடுவார்கள். சத்தியம் தெரியாத பலர் குழப்பத்துக்குள்ளாகி கடைசியில் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

ஒரு பாவி மனம் திரும்பும் போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கிறது. ஆனால்  மனம் திரும்பியவர்களை துர் உபதேசத்தை சொல்லி வஞ்சிக்கும் போது பரலோகத்தில்  துக்கத்தை உண்டாக்குமல்லவா?இவர்களால் பாதாளம் தான் சந்தோஷப்படும்.அப்படிப்பட்ட துர் கிரியைகளை செய்கிறவர்களுக்கு நீங்கள்  வாசல்களை திறந்து கொடுக்கும் போது, உங்கள் மூலமாய் துர் உபதேசம் உபதேசிக்கப்படுவதற்கும் உங்கள் மூலமாய் பலர் வஞ்சிக்கப்படுபவர்களுக்கும் நீங்கள் பங்காளியாயிருக்கிறீர்கள்.


பல சபைகளில் இத்தகைய வஞ்சிக்கிற ஆவிகளை உடையவர்களை ஊழியத்தில் அனுமதித்தபடியினாலே பல சபைகளில் பிரிவினைகள் வந்து இறுதியில் உடைந்து போயிருக்கிறது.

வேதாகமத்தின் சத்தியத்தை எழுதிக் கொடுத்தவரும் அதை நமக்கு விளக்கிக் கொடுக்கிறவரும் மேலும் சகல சத்தியத்துக்குள் நம்மை நடத்துகிற வருமான பரிசுத்த ஆவியானவர் எழுதிக் கொடுத்த வேத எழுத்துக்களுக்கு விரோதமாய்,ஒரு மனிதன் கொண்டு வந்த கள்ள உபதேசத்தை பேசுகிறவர்களோடு நீங்கள் ஒப்புரவாகி அவர்களோடு ஒத்த வேஷம் தரித்து அவர்களை ஊழியத்தில் பயன்படுத்துகிறீர்களா?


எழுதப்பட்ட சத்தியத்தை புரட்டுவதுதேவனுக்கு விரோதமான பகை.  இவர்களுக்கு உங்கள் ஊழியங்களில் வாசல்களை திறந்து கொடுக்கும் போது அதன் விளைவுகள் உங்களை  பாதிக்கும். ஏனென்றால் பவுல் சொன்னது போல நீங்கள் கற்றுக் கொண்ட உபதேசத்துக்கு விரோதமாய் பேசக் கூடிய துர் உபதேசத்தை நீங்கள் பரப்ப அனுமதிக்கிறீர்கள்.அது சரி என்று மறைமுகமாக ஒத்து கொள்கிறீர்கள். 1 தீமோத்தேயு 6ம் அதிகாரத்தில் ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,  அவனை விட்டு விலகு என்று பவுல் எச்சரிக்கிறார்.

இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். 


ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.  வெளிப்படுத்தினத விசேஷம் 22:18,19

bottom of page