top of page

வாலிபனே உன் சிருஷ்டிகரை நினை !!

 

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.  சங்கீதம் 119:9

 

இன்றைய வாலிபர்கள் தேவனோடு பேசுவதை விட்டு விட்டு உலகத்தோடு உறவாடி கொண்டிருக்கிறார்கள்.பெரும்பாலான வாலிபர்கள் உலகத்தோடு ஐக்கியம் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.இவர்கள் தேவனுக்கு முன்பாக வேஷமாகவே திரிகின்றனர்,இன்றைக்கு வாலிபர்களை வீழ்ச்சியடைய செய்யும்படி பிசாசு வைத்திருக்கும் கண்ணி உலக ஆசை இச்சைகள். இவர்கள் வைத்திருக்கும் உலக பொருள்கள் மூலம் இவர்களை மயக்கி அடிமைபடுத்தி தேவனை தேடாதபடிக்கு தங்களுடைய வாலிப நாள்களில்  சிருஷ்டிகரை நினைக்காதபடிக்கு சாத்தான் தந்திரமாக உலக ஆவியினால் இவர்களை ஆளுகை செய்கிறான்.

 

அதாவது சாத்தான் இந்த கடைசி நாள்களில் மிகவும் தந்திரமாக வாலிபர்களின் ஆத்துமாக்களை திருடவும் அழிக்கவும் வருகிறான், அன்றைக்கு இயேசு தன் சீஷர்களை குறித்து பிதாவிடம் பேசும் போது நான் உலகத்தானல்லாதது போல இவர்களும் உலகத்தார்கள் அல்ல என்று சாட்சி கொடுத்தார்.(நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன், நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல, ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. 


நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல  உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய வசனமே சத்தியம். யோவான் 17:14-17 )

 

தங்களை பரிசுத்தமாக்கும்படிக்கு கொடுக்கபட்ட சத்திய வசனத்தை தியானிக்கும்படி அநேகருடைய விலையேறப்பெற்ற நேரத்தை பிசாசானவன் திருடிவிட்டான்.அடுத்ததாக இவர்களை உலகத்துக்கு அடிமையாகி உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்க செய்து தேவனால் சகல சத்தியத்துக்கும் நடத்தபடும்படிக்கு தேவனால் கொடுக்கப்பட்ட பரிசுத்தாவியானவரை புறக்கணிக்க செய்கிறான். (உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும்.இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது, அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். யோவான் 14:17).

 

பெற்றோர்களே ஊழியக்காரர்களே உங்கள் வாலிபர்களை கூர்ந்து கவனியுங்கள்.அநேக வாலிபர்கள் கடமைக்காக சபைக்கு செல்கிறார்கள்.கடமைக்காக வேதாகமத்தை சும்மா வாசிக்கிறார்கள்.நாம் மீட்கப்படும் படியாக தன் ஜீவனையே தந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நேசித்து,சகல சத்தியத்துக்குள்ளும் நடத்தபடும்படியாக பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபடும்படிக்கு தேவ சமூகத்துக்கு செல்லும் வாலிபர்கள் தான் வசனத்தால் தங்களை காத்து கொண்டு ஜெயம்  கொண்டவர்களாக   எழும்புவார்கள்.(நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். 1 கொரிந்தியர் 2:12 .)

 

இன்றைக்கு இந்த உலகத்தின் ஆவி நாம் பயன்படுத்தும் Smart phone வழியாக Whatapp,Face book  மற்றும் அநேக இணையதளங்கள் மூலம் வாலிபர்களை ஆண்டவருக்கு நேரத்தை கொடுக்காதபடிக்கு ஆளுகை செய்து கொண்டிருப்பதால் இவர்கள் தேவ சமூகத்துக்கு சென்று தேவ வல்லமையை பெற்று கொள்ளாததினால் தேவபெலனற்று உலக ஆசை இச்சைகளினால் வீழ்ச்சியடைந்து விட்டார்கள்.(அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.1 யோவான் 4-5.)

 

இன்றைக்கு அற்பமான நிலையில்லாத உலக ஆசை இச்சைகளுக்காக தேவனை விட்டு விலகி உலகத்துக்கு செவி கொடுக்கும்படி பிசாசு அநேகரை அடிமைபடுத்திவிட்டான்.வாலிபனே நீ தேவனோடு நடக்க அழைக்கப்பட்டவன்.தேவனை தரிசிக்க கூடிய உன் கண்கள் உலகத்தின் ஆசை இச்சைகளை பார்க்கும்படிக்கும்அவருக்கு செவி கொடுக்காமல் உலகத்துக்கு செவி கொடுக்கும்படிக்குபடி நீ வஞ்சிக்கபட்டு போனதை உணரவில்லையா?நிலையில்லாத உலகமா அல்லது நித்தியமான பரலோகமா?நீ எங்கே போய் கொண்டிருக்கிறாய்?நீ எதை வாஞ்சித்து கொண்டிருக்கிறாய்?உன் வழிகள் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை இன்னும் நீ உணரவில்லையா? (உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.


ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.1 யோவான் 2-15.16)


வாலிபனே நீ தேவனை விட்டு விலகி இருளின் ராஜ்ஜியத்தின் அடிமைதனத்தில் இருக்கிறாய்.உன் இளமையின் சந்தோஷத்துக்காக உன் நெஞ்சின் வழிகளிலும்,உன் கண்ணின் காட்சிகளிலும் நடக்கும் உன்னை நியாயதீர்ப்பில் கொண்டு வந்து நிறுத்துவார்.எனவே மனம் திரும்பி உலகத்தை விட்டு விட்டு தேவ சமூகத்துக்கு வா?தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடு.காணப்படாத நித்தியமான மறுமைக்கானவைகளை நோக்கிப்பார்.உனக்காக ஜீவனை கொடுத்த இயேசுவை புறக்கணிக்காதே!!


(உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் 1 யோவான் 2-17)  

 

நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை, தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும், மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. பிரசங்கி 12:1,2 ஆமென்.

bottom of page