top of page

இனியாவது சபைகளில் சாதியை புறக்கணியுங்கள்

 

சாதிகள் இல்லையடி பாப்பா என்று உலகத்தான் முழங்கினான். ஆனால் பரலோகத்துக்கு போகிறோம் என்கிறவர்கள் ஏன் இதை பற்றி வாய் திறப்பதில்லை?

 

சபைகளில் இந்துத்துவாவின் மனுதர்மத்தின் அடிப்படையான சாதிக்கு எதிராக ஊழியக்காரர்கள் ஏன் பேசுவதில்லை தெரியுமா? பல ஊழியக்காரர்கள் தங்கள் சாதியை விட்டு விட முடியவில்லை. சாதி என்கிற இந்த அருவருப்பு சபைகளில் இருப்பது வரை எந்த எழுப்புதலும் வாராது. மருந்து மாத்திரை எடுப்பது அடிப்படை விசுவாசத்துக்கு  எதிரானது என்று தங்களை பரிசுத்தவான்கள் என்று சொல்கிறவர்களால் கூட சாதியை விட்டு விட முடியவில்லை.

கிறிஸ்தவத்தில்  மற்ற சாதியினரை தீண்டதகாதவர்களாக்கி தங்களை பிராமணர்களை போல உயர்த்தி கொள்ளும் சில சாதி பார்த்து பிரித்தாளுகிறவர்கள் தங்கள் சாதி வைராக்கியத்தை விட வேண்டும்.                 தமிழ்நாட்டில் கிறிஸ்தவத்தில் சாதி என்ற பிரிவினையை செயல்படுத்துகிறவர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர். இவர்கள் தங்களை உயர்ந்த ஜாதியாய் நினைத்து கொண்டு மற்ற சாதியினரை புறக்கணிக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பாக இவர்கள் சமூகத்து பெண்கள் உட்பட பல கீழ் ஜாதியினர் என்று அழைக்கப்பட்டவர்கள் குமரி மாவட்டத்தில் மேல் சாதியினருக்கு முன்பாக மேலுடையை போட அனுமதிக்கபடவில்லை!!, இவர்கள் தீண்டதகாதவர்களாக நடத்தப்பட்டனர்!!, இவர்கள் பின் தங்கிய நிலையில்  இருந்தவர்கள்!!, இவர்களை குறைத்து கூறுவது என் நோக்கமல்ல. இது வரலாற்று உண்மை. இவர்கள் ஒரு காலத்தில் தாங்கள் எப்படி  நடத்தப்பட்டோம் என்பதை நினைக்காமல் இன்றைக்கு மற்ற சாதியினரை தீண்டதகாதவர்களாக கருதுகின்றனர். மற்றவர்களை மறைமுகமாக புறக்கணிக்கின்றனர்.

 

குமரி மாவட்டத்தில் உள்ள சபைகளில் ஊரை கேட்டு சாதியை தெரிந்து கொள்வார்கள். உங்களிடம் எந்த ஊர் என்று கேட்டால் உங்கள் சாதியை அறிந்து கொள்வதற்காக தான் கேட்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சாதி மீது வைராக்கியம் கொண்ட இந்த சமூகத்தை சேர்ந்த சில விசுவாசிகளும் ஊழியக்காரர்களும் தான் கிறிஸ்துவத்தில் காணப்படும் சாதி பிரிவினைகளுக்கு முக்கிய காரணம். மறு பக்கம் பார்க்கும் போது தமிழ் நாட்டில் கிறிஸ்துவம் வளருவதற்கு பெரும் பங்கு இவர்களை சாரும். மிஷனரி பணிகளிலும் சபை ஊழியங்களிலும் இவர்களது பங்களிப்பு அதிகம் தான் இவர்கள் தாராளமாக காணிக்கை கொடுப்பவர்கள், கிறிஸ்துவத்தின் மேல் அதிக பக்தி வைராக்கியம் கொண்டவர்கள், இன்றைக்கு தமிழ் நாட்டில் முக்கிய முன்னணி ஊழியக்காரர்கள் இந்த சமூகத்தை சார்ந்தவர்களே. ஆனால் இவர்களது சாதி வெறி இன்றைக்கு கிறிஸ்துவத்தில் பிரிவினையை ஏற்படுத்துகிறது என்பது உண்மை தான்.

ஊழியங்களில் மோகன் சி லாசரஸ் மாத்திரமே சாதி  பார்ப்பது பாவம் என்று வைராக்கியமாக பேசுகிறார். சாதி பார்க்கிறவன் பரலோகத்துக்கு போக மாட்டான் என்று பேசுகிறார். வேறு யாரும் சாதி என்ற சாத்தானியத்துக்கு எதிராக பேசுவதில்லை. இவர் சாதிக்கு எதிராக வைராக்கியமாக பேசினாலும் அவரை சுற்றி இருப்பவர்கள் சாதி பார்க்கிறவர்களாக இருக்கின்றனர் என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.  சென்னையை சேர்ந்த பிரபல போதகர் நடத்தும் ஊழியங்களில் மற்ற சாதியை சேர்ந்த ஊழியக்காரர்கள் பயன்படுத்தபடுவதில்லை. நாங்கள் சாதி பார்பதில்லை என்று சொல்லும் அநேக ஊழியக்காரர்கள் தங்கள் பிள்ளைகள் திருமணத்தில் சாதி பார்த்து தான் திருமணம் செய்கின்றனர். இவர்கள் தங்கள் ஊழியங்களில் மற்ற சாதியினரை புறக்கணித்து ஒதுக்கி வைப்பது தன்னை போல பிறனை நேசி என்ற இயேசு நாதரின் போதனைகளுக்கு எதிரிடையாக இருக்கிறது. சென்னையில் , சிலர் நம்ம ஆள்கள் நடத்தும் TV Channel ஐ  பாருங்கள்...மேலும் ஒரு குறிப்பிட்ட  Channel ன் பேரை சொல்லி இதை பார்க்காதீர்கள் ஏனென்றால் அது நம்மவர்களுடையது அல்ல வெளிப்படையாக சொல்வதை கேட்ட ஒருவர் ரொம்ப வருத்தப்பட்டார். 

இன்றைக்கு கிறிஸ்துவத்தில்  நாங்கள் தான் உயர்ந்த சாதி என்று எண்ணி கொண்டிருக்கும் ஊழியக்காரர்கள் முதல் விசுவாசிகள் உடனடியாக  மனம் திரும்ப வேண்டும். பல வருடங்களுக்கு முன்பு தாங்கள் குமரி மாவட்டத்தில் எப்படி நடத்தப்பட்டோம் என்பதை நினைத்து மற்ற சாதியினரை மட்டமாக எண்ணி அவர்களை புறக்கணிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த ஜாதி பார்க்கும் முறைமை அநேகமாக எல்லா சமூகத்தினரிடமும் இருக்கிறது என்பதும் உண்மை தான். இவர் நம்ம ஆள் ...இவர் நம்ம சமூகம் என்று என்று சொல்வதை தயவு செய்து கைவிடுங்கள். பரலோகத்தில் கொள்வினை கொடுப்பனை இல்லை. மேலும் தூதர்களை போல இருப்பீர்கள் என்று இயேசு சொன்னாரே?பரலோகத்துக்கு போகிற நீங்கள் சாதி பார்த்து பிரித்தாளும் பிரிவினையை உடனடியாக விடுங்கள்.வட இந்தியாவில் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்களிடையே  சாதி பிரிவினை இல்லை என்று ஒரு மிஷனரி குறிப்பிட்டார்.  

பழைய ஏற்பாட்டில் கோத்திரங்கள் உண்டு என்று நீங்கள் வாக்குவாதம் செய்யலாம்.ஆனால் அதற்கும் இப்பொழுது உள்ள சாதி பிரிவினைகளுக்கும் வித்தியாசம் உண்டு.வேதாகமத்தில் சொல்லப்பட்ட ஜாதிகள் கோத்திரங்கள் என்பது பல பாஷை பேசுகிறவர்களையும் அதாவது தேசங்களை சார்ந்தவர்களையும் குடும்பங்களையும் குறிக்கிறது. ஆனால் இங்குள்ள இந்த சாதியம் இந்து மதத்திலிருந்து வந்தது.விக்கிரக வழிப்பாடுகளின் ஆணி வேர் தான் சாதி.சாதி என்பது சாத்தானியம்.சாதியம் என்பது பிரித்தாளும் பிரிவினை என்கிற மார்க்கபேதம்.வேதாகமத்தில் தீட்டுள்ளவர்கள் என்றால் பாவம் செய்கிறவர்களை தான் குறிக்கும்.எனவே இருளின் அதிகாரத்திலிருந்து விடுதலையாகி குமாரனாகிய கிறிஸ்துவின் ராஜியத்துக்கு வந்த பிறகு மீண்டும் இருளின் ராஜியத்தில் உள்ள சாதியத்தை கடைப்பிடிப்பது தவறு.

அடுத்ததாக ஒரு புறம் இயேசுவை ஆராதித்து விட்டு மறுபுறம் சாதி பார்த்து கொண்டிருப்பீர்களானால் நீங்கள் மாயமாலமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தானே அர்த்தம்.ஏனென்றால் சாதி என்பது பிறப்பின் மூலம் பிரம்மா என்ற கடவுளின் உடலிலிருந்து சாதி ரீதியாக மனிதர்களை பிரிப்பது என்ற இந்து மதத்தின் அடிப்படை கொள்கை..நீங்கள் சாதி பார்பீர்களானால் இன்னமும் இந்து மதத்தின் அடிப்படை கொள்கைகளை பின்பற்றுகிறீர்கள் என்று பொருள். நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? இருளுக்கும் ஒளிக்கும் ஐக்கியமேது?


தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. 


ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.  2 கொரிந்தியர் 6:16,17 இந்த வசனத்தின் ஆழங்களை புரிந்து கொள்ளுங்கள்.

பல வருடங்களுக்கு முன்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தலித்துகள் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள். அவர்கள் ஏன் கிறிஸ்துவத்துக்கு வரவில்லை தெரியுமா? இந்து மதத்தை போல கிறிஸ்துவத்திலும் சாதி பாகுபாடு இருக்கிறது. எங்களுக்கு இயேசு நாதரை பிடிக்கும் ஆனால் கிறிஸ்துவ சபைகளில் சாதி பாகுபாடு  இருக்கிறது என்றார்கள். கிறிஸ்துவர்கள் சாதிய அடிப்படையில் இப்பொழுதும் நம்மை போல இந்துக்களாகவே இருக்கின்றார்கள் மேலும் பெயரளவில் தான் இவர்கள் கிறிஸ்தவர்கள் மற்றபடி இவர்கள் இந்துக்களே என்று இந்து மத சாமியார் காஞ்சி சங்கராச்சாரியார் குறிப்பிட்டார்.ஊழியக்காரர்களே விசுவாசிகளே இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டோம்   மேலும் ஒரே ஆவியினால் தாகம் தீர்க்கப்பட்டோம்என்று ஒரு பக்கம் சொல்லி கொண்டு மறு பக்கம் சாதி வெறியோடு செயல்படுவது உங்களுக்கு வெட்கமாயில்லையா?

  • இன்றைக்கு இஸ்லாமியர்கள் மற்றும் நாத்திகவாதிகள் கிறிஸ்துவத்தில் மனிதர்களை பிரித்தாளும் சாதி பிரிவினைகள் ரொம்பவே இருக்கிறது என்று வெளிப்படையாக விமர்சிக்கின்றனர்.

  • இன்றைக்கு இஸ்லாமியர்கள் கிறிஸ்துவத்தை தாக்க பயன்படுத்தும் ஆயுதம் சாதியம். கிறிஸ்துவ மதத்திற்கு போகாதீர்கள் அங்கு ஆலயத்துக்குள்ளே சாதி என்கிற தீண்டாமை இருக்கிறது என்று வெளிப்படையாகவும் கடுமையாகவும் விமர்சிக்கிறார்கள்.

  • இன்றைக்கு சாதி பிரிவினை ஆத்தும ஆதாயத்துக்கு எதிரான முக்கிய பிரச்சனையாக முன்வைக்கப்பட்டாலும்   ஊழியக்காரர்கள் சாதியை ஒழிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் இருதயத்தில் ஊறி போய் நாற்றமடிக்கும்  சாதி வைராக்கியம்.

எழுப்புதல் என்று வாய் கிழிய கத்தி கொண்டிருக்கும் ஊழியர்கள் தங்கள் சபைகளில் சாதி பிரிவினையை ஒழித்தாலே எழுப்புதல் வந்துவிடும். இன்றைக்கு எழுப்புதலுக்கு தடையாக இருக்கும் சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு ஊழியக்காரரும் விசுவாசிகளும் தீர்மானம் எடுக்க வேண்டும்.சாதி என்பது இந்து மதத்திலிருந்து வந்தது. சாதி பார்த்து பிரித்தாளுவது தேவனுக்கு எதிரானது.இந்த சபையில் திருமணம் உட்பட எந்த விஷயத்திலும் சாதி பார்க்க கூடாது என்று ஊழியக்காரர்கள் வெளிப்படையாக கட்டளையிட தயாரா? செய்யமாட்டார்கள் ஏனென்றால் இவர்களிடம் இருக்கு சாதி வைராக்கியம் என்கிற மார்க்க பேதம்.ஊழியக்காரர்கள் சாதி வெறியிலிருந்து மனம் திரும்பாத வரை  ஒரு எழுப்புதலும் வராது.

இன்றைக்கு ஒரு மனிதன் உங்கள் சபைக்கு அதாவது இயேசுவிடம் வருவதற்கு நீங்கள் கடைபிடிக்கும் சாதியம்  இடறலாயிருக்கிறதே? இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்.லூக் 17-2. என்று வேதம் சொல்கிறதே.

 

ஆகையால் சாதி வெறி, மற்றும் சாதி வைராக்கியங்களிலிருந்து மனம் திரும்புங்கள். உங்கள் சாதி வைராக்கியத்தை குப்பையில் எறியுங்கள். உங்களை பரலோகத்துக்கு அழைத்து செல்ல இயேசு கிறிஸ்து அடிமையை போல சிலுவையின் முடிவு பரியந்தம் தன்னை தாழ்த்தினாரே? நான் பெரியவனா நீ பெரியவனா என்று வாக்குவாதம் பண்ணி கொண்டிருந்த சீஷர்களின் கால்களை கழுவி என்னை போல தாழ்மையாக நடந்து கொள்ளுங்கள் என்ற மாதிரியை காண்பித்தாரே. இனியும் கிறிஸ்துவின் அன்பை உணராமல் நாங்கள் தான் பெரிய சாதி நாங்கள் தான் உயர்ந்தவர்கள்  என்று சொல்லி கொண்டிருக்க போகிறீர்களா? அல்லது கிறிஸ்துவின் உபதேசத்தை விட எங்களுக்கு சாதி தான் முக்கியம் என்று இந்து மத கொள்கையை பின்பற்றி கொண்டு மாயமாலமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ போகிறீர்களா? கிறிஸ்துவின் அன்பா? அல்லது அதற்கு எதிரான மனிதர்களை பிரித்தாளும் வஞ்சகம் என்ற சாதியமா?இரண்டு பேருக்கு நீங்கள் ஊழியம் செய்ய முடியாது.ஒன்றை பகைத்து மற்றதை நேசிப்பீர்கள். கிறிஸ்துவை அதாவது கிறிஸ்துவின் உபதேசத்தை பகைத்தால் பரலோகம் உங்களை புறக்கணிக்கும்.நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். யோவான் 17-22 என்று இயேசு சொன்னாரே?

 

நாம் ஒன்றாக இருப்பதற்கு ஒரு மனமாக கூடுவதற்கு சாதி தடையாக இருக்கிறதே? தேவன் உங்களுக்கு கொடுத்த மகிமையை சாதி பிரிவினைகளினால் அவமானப்படுத்துகிறீர்களே?.உன்னை போல பிறனை நேசி என்ற வேதாகமம் முழுத்தொகையாய் அடங்கியிருக்கிற கற்பனைக்கு சாதி பிரிவினையினால் கீழ்படியாமல் போகிறோமே?காண்கின்ற சகோதரனிடம் அன்பு கூறாதவன் காணாத தேவனிடம் எப்படி அன்பு கூறுவான்???சாதியை வைத்து கொண்டு தன் சகோதரனை புறம்பே தள்ளி அவனை பகைக்கிறவன் பொய்யனாயிருக்கிறான். கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்;. 2 யோவான் 1-9.


எனவே சாதி பிரிவினை தேவனுடைய பார்வையில் அருவருப்பாக இருக்கிறது என்பதை இந்த சூழ்நிலைகளிலாவது உணருங்கள்.அநேக ஜனங்கள் இயேசுவை ஏற்று கொள்ளாததற்கு முக்கிய காரணம் உங்களிடம் காணப்படும் சாதி பிரிவினை என்கிற சாதி வெறி.எனவே இந்த கடைசி நாள்களில் நாம் ஒவ்வொருவரும் நம் குடும்பத்திலும் சபையிலும் சாதி பார்ப்பதில்லை என்று தீர்மானம் எடுப்போம்.சாதி என்கிற பிரிவினை தேவனுக்கு அருவருப்பானது மேலும் இயேசுவின் கற்பனைகளுக்கு எதிரானது என்பதை சபைகளில் வெளிப்படையாக சொல்வோம்.எங்களிடம் சாதி இல்லை என்று வைராக்கியமாக சொல்வோம்.இதுவே எழுப்புதலின் ஆரம்பம். ஆமென்.

bottom of page