top of page

பரிசுத்த ஆவியின் அபிஷேகம்

சகோ. எட்வின் கார்டர் (சோஹார் -  ஓமான்)

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும் யூதேயா முழுவதிலும், சமரியாவிலும் பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.அப்போஸ்தலர் 1:8

முன்னுரை: நியாயப்பிரமாணம் நம்மை பாவத்திற்குள்ளாக அடைத்து வைத்திருந்தது, இயேசுவின் பிரமாணம் நம்மை பாவத்திலிருந்து விடுதலை செய்தது, ஆனால் ஆவியின் பிரமாணம் நம்மை கர்த்த உலாவுகிற ஆலயமாக மாறச் செய்தது. என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.

பாருங்கள் பரிசுத்த ஆவி எல்லார்மேலும் பொழிந்தருளப்படுவதற்கு முன்பாக கர்த்தர் சபையில் ஆட்களை சேர்த்தார் என்று எங்கேயாவது எழுதியிருக்கிறதா? என்று பார்ப்பீர்களானால் இல்லை என்று சொல்லலாம்.

ஆனால் என்றைக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் விசுவாசிகளிடத்தில் ஆரம்பமானதா அந்த நாளில் இருந்து கர்த்தர் சபைகளில் விசுவாசிகளை சேர்த்தார் என்று அப் 2:47 ஆம் வசனத்தில் எழுதப்பட்டிருப்பதை நாம் ஒவ்வொருவரும் வாசிக்க முடிகிறது மேலும், இந்த பரிசுத்த ஆவியானவர் எப்பொழுது சீஷர்கள் மேல் பொழுந்தருளப்பட்டாரோ அப்பொழுதிலிருந்துதான் சீஷர்கள் கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றி நடக்க தொடங்கினார்கள். இந்த சாட்சியைப் பார்த்தப் பிறகுதான் சீஷர்கள் ஜனங்களால் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்று அப்போஸ்தலர் 11:26 ல் பார்க்கிறோம்.

எனக்குப் பிரியமான தேவ பிள்ளைகளே இத்தகைய வல்லமையான பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையிலும் கிரியை செய்வாரானால் நாமும் நம்முடைய குடும்பமும் நம்முடைய சபையும் இந்த பொல்லாத உலகத்திலே கர்த்தருக்காக சாட்சியாக வாழ முடியும் என்பதை மறந்து விடாதீர்கள். முதலில் பரிசுத்த ஆவியானவரைப் பற்றியத்தான வெளிப்பாட்டை நாம் அறிந்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் நமக்கு இந்த வேதத்தில் எழுதப்பட்டிருக்கிற இரகசியங்களை அறிந்து கொள்ள முடியும் இல்லாவிட்டால் மற்ற புஸ்தகங்களை வாசிக்கிறது போல இந்த மகத்தான வேதத்தை வாசித்து கொண்டே இருப்போம். ஆகவே முதலில் உங்கள் முன்பாக நான்கு விதமான கேள்விகளை வைத்து அந்த கேள்விக்கு பரிசுத்த ஆவியானவரின் உதவிக் கொண்டு பதில் கொடுக்க விரும்புகிறேன்.

1.  பரிசுத்த ஆவியானவர் யார்?

2.  யாருக்கு பரிசுத்த ஆவி கிடைக்கிறது?

3.  ஏன் பரிசுத்த ஆவி நமக்கு அவசியம்?

4.  பரிசுத்த ஆவியானவர் நமக்கு கொடுக்கும் பெலன்கள் என்ன? என்பதை பின்வருமாறு பார்க்கலாம்....

1.  பரிசுத்த ஆவியானவர் யார்?

வேதம் சொல்லுகிறது, நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன் அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும் படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார் யோவான் 14:16. வேறொரு தேற்றரவாளன் என்பது அவருடைய அடுத்த செயல்பாட்டினைக் குறிக்கிறது அவரை நபராக பார்ப்பது தவறல்ல ஆனால் இன்று அனேகர் மூன்றாவது நபராக பிரித்து அதாவது மூன்றாவது தெய்வாக சொல்லுவது என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. தேவன் வெளிப்படுகிற அதாவது தம்முடைய ஜனங்களை ஆயத்தப்படுத்துகிற விதங்கள் வேறுபடுகிறது. ஆனால் அவருடைய சுபாவங்கள் எல்லா சமயத்திலும் ஒரேவிதமாகவே காணப்படுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

ஒரு காரியம் நம் எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் அது என்னவென்றால் தேவன் ஒருபோதும் பொய் சொல்லுகிறது இல்லை மற்றும் தாம் சொன்ன கட்டளைகளை ஒரு போதும் மீறுவதில்லை என்பதை மறந்து விடாதீர்கள். மனுஷர்கள் ஒவ்வொரு சமயம் மாறிக்கொண்டே இருப்பான் ஒருநாள் ஒரு காரியத்தை சொல்லுவான் இன்னொரு நாள் தான் சொன்ன காரியத்தை பொய் என்று சொல்லுவான் ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார் என்கிறதான வெளிப்பாட்டை ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பாருங்கள், பத்து கட்டளைகளில் ஒன்றான கட்டளை சொல்லுகிறது, என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாருக்க வேண்டாம் யாத்திராகமம் 20:3. அப்படியென்றால் ஏன் இன்று நாம் நம்முடைய கர்த்தரை இவ்வாறாக பிரித்து காண்பித்துக் கொண்டிருக்கிறோம். ஒருகாரியம் செய்யலாம் நாம் பிரித்து காண்பிக்கிற நம்முடைய பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஒவ்வொருவரிடமே நாம் இந்த இரகசியத்தை கேட்டு ஒரு முடிவுக்கு வரலாம்.

பழைய ஏற்பாட்டை மூன்றாக பிரிக்கலாம், எப்படியென்றால்?? 

 

  • ஆதியாகமம் 1 ஆம் அதிகாரம் முதல் மல்கியா 4 ஆம் அதிகாரம் வரை – பிதாவின் செயல்பாடுகள் 

  • மத்தேயு 1 ஆம் அதிகாரம் முதல் அப்போஸ்தலர் 1 ஆம் அதிகாரம் வரை – குமாரனின் செயல்பாடுகள் 

  • அப்போஸ்தலர் 2 ஆம் அதிகாரம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் 22 ஆம் அதிகாரம் வரை – பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடுகள்.

முதலாவதாக, நாம் பிதாவினிடத்தில் கேட்போம், பிதாவே வேதத்தில் எத்தனை தெய்வங்கள் இருக்கிறது, அதற்கு பிதா கொடுக்கிற பதிலைப் பாருங்கள்!!!

இஸ்ரவேலே கேள் நம்முடைய தேவானாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் உபாகமம் 6:4

இரண்டாவதாக, நாம் குமாரனிடத்தில் கேட்போம், குமாரனே வேதத்தில் எங்களுக்கு எத்தனை தெய்வங்கள் இருக்கிறது, அதற்கு குமாரன் கொடுக்கிற பதில் என்னவென்று பார்ப்போம்!..

இஸ்ரவேலே கேள் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் மாற்கு 12:29

அடுத்ததாக, நாம் பரிசுத்த ஆவியானவரிடம் கேட்போம், பரிசுத்த ஆவியானவரே வேதத்தில் எங்களுக்கு எத்தனை தெய்வங்கள் இருக்கிறார்கள். அதற்கு பரிசுத்த ஆவியானவர் கொடுக்கிற பதில் என்னவென்று பார்ப்போம்...

ஒரே கர்த்தரும் ஒரே விசுவாசமும் ஒரே ஞானஸ்னானமும் எல்லாருக்கும் ஒரே தேவனும், பிதாவும் உண்டு, அவர் எல்லார்மேலும், எல்லாரோடும் உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் எபேசியர் 4:5,6.

மேலே சொல்லப்பட்ட வசனம் நமக்கு சில காரியங்களை உணர்த்துவதை நாம் பின்வருமாறு பார்க்கலாம், அதாவது, எல்லார் மேலும் அன்று இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தும் போது மேலே மேகஸ்தம்பமாகவும், அக்கினிஸ்தம்பமாகவும் எல்லாரோடும் அதாவது இயேசு இந்த உலகத்தில் இம்மானுவேலாக வந்து எல்லா ஜனங்களோடும் எல்லாருக்குள்ளும் அதாவது பரிசுத்த ஆவியாக நமக்குள் வாசம்பண்ணுகிறார் ஆகவே இந்த வசனம் நமக்கு எதை உணர்த்துகிறது என்றால் நாங்கள் மூன்று பேரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதையே நமக்கு கர்த்தர் அழகாக எடுத்துச் சொல்லுகிறார்.

மேலும் தேவன் இந்த பரிசுத்த ஆவியானவரைக் குறித்து யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் வேதத்தில் தெளிவாக எழுதி வைத்திருக்கிறார். எப்படியென்றால் அவர் [ பரிசுத்த ஆவியானவர் ]

  1. தேவனுடைய ஆவி என்றும் – ரோமர் 8:9, ஆதி 1:2

  2. கர்த்தருடைய ஆவி என்றும் – எண்ணாகமம் 11:29, நியாயா 3:10, மீகா 3:8

  3. பிதாவின் ஆவி என்றும் – மத் 10:20

  4. பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவர் என்றும் – யோவான் 15:26

  5. கிறிஸ்துவின் ஆவி என்றும் – 1பேதுரு 1:11, ரோமர் 8:9

  6. குமாரனுடைய ஆவி என்றும் – கலா 4:6

  7. இயேசு கிறிஸ்துவினுடைய ஆவி என்றும் – பிலி 1:19

  8. வேதத்தில் பரிசுத்த ஆவியானவர் எப்படியெல்லாம் இருக்கிறார் என்பதை தெளிவாக எழுதி வைத்திருக்கிறார்.

2.   ஏன் பரிசுத்த ஆவியானவ்ர் தேவை?

அ.சபைகளுக்கு எப்படி ஒரு நல்ல போதகர் தேவையோ அதே போலத்தான் இன்று கிஸ்தவ சமுதாயத்திற்கு இந்த பரிசுத்த ஆவியானரின் தேவை எதற்கு தெரியுமா?

வேதம் சொல்லுகிறது, நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்க வேண்டுவதில்லை அந்த அபிஷேகம் சகலத்தையும் குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது பொய்யல்ல – 1யோவான் 2:27. வேதம் சொல்லுகிற சரியான சத்தியத்தை எந்த மனுஷனாலும் நாம் அறிந்து கொள்ள முடியாது அதே நேரம் பரிசுத்த ஆவியானவர் நாமக்குள் இருப்பாரானால் அவர் நம்மை சரியான சத்தியத்திற்குள் நம்முடைய வாழ்க்கையை பயணம் செய்ய வைப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.

ஆ. இன்று அனேகர் தங்களுடைய பிழைப்பிற்காகவும் இழிவான ஆதாயத்திற்காகவும் விசுவாசிகள் பாவம் செய்யும் போது கண்டித்து உணர்த்துவதில்லை, ஏன் தெரியுமா? அப்படி உணர்த்தினால் அவர்களால் வருகிற தசம பாகமும், காணிக்கையும் கிடைக்காமல் போய் விடுமே என்பதற்காக. ஆனால், நம்முடைய பரிசுத்த ஆவியானவரோ, அவர் வந்து பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் – யோவான் 16:14.

இ.இயேசு தம்முடைய சீஷர்களிடம் தாம் என்ன சொல்லுகிறேனோ அதேயே போய் ஜனங்களுக்கு போதிக்கும் படி அறிவுறுத்தினார் ஆனால் இன்று வேதத்தில் இல்லாத காரியங்களையே அதிகமாக போதிப்பதை நாம் இன்றைய நாட்களில் பார்க்க முடிகிறது.

ஆனால் பரிசுத்த ஆவியானவரோ அப்படியல்ல இயேசு என்ன சொன்னாரோ அதை நமக்கு சொல்லி இயேசுவை மகிமைப்படுத்துகிறவராய் இருக்கிறார் – யோவான் 16:14.

ஈ.தேவ இரகசியங்களை நாம் அறிய வேண்டுமானால் அவரை போல நாம் மாற வேண்டும் அப்பொழுதுதான் நாம் கர்த்தரைக் குறித்து சாட்சி கொடுக்க முடியும், வேதமும் இதை தெளிவாக சொல்லுவதை பார்க்கலாம்.

1கொரி 2:11 – மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான் அப்படிப்போல தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.

உ.சுயநலமற்ற உண்மையான பட்சபாதம் இல்லாத சகலத்தையும் தாங்குகிற தெய்வீக அன்பு பரிசுத்த ஆவியின் மூலமே நம்முடைய இருதயங்களில் ஊற்றப்படுகிறது என்று வேதம் சொல்லுகிறது – ரோமர் 5:5.

ஊ. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் இயேசுவை ஆராதிருக்கிற பரிசுத்த ஆலயமாக மாறுகிறோம் என்று வேதம் சொல்லுகிறது – 1கொரி 3:16, 6:19, 2கொரி 6:16. ஆகவே ஒவ்வொருவருக்கும் இந்த மகத்தான ஆவியானவர் தேவை என்பதை எப்பொழுதும் உங்கள் சிந்தையில் சுமக்க வேண்டும்.

3.  யாருக்கு பரிசுத்த ஆவி கிடைக்கிறது?

பரிசுத்த ஆவி நம்முடைய பரிசுத்தத்தின் அளவின் படி பொழிந்தருளப்படவில்லை, அப்படியென்றால் யாருக்கெல்லாம் இந்த அபிஷேகம் ஊற்றப்படுகிறது, வேதம் சொல்லுகிறது, யோவேல் 2:28 – அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். ஏசாயா 44:3 – தாகமுள்ளவன் மேல் தண்ணீரையும் வறண்ட நிலத்தின் மேல் என் ஆவியையும் ஊற்றுவேன். லூக்கா 11:13 – பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். ஏசாயா 55:1 – ஓ தாகமாயிருக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்.

மேலே சொல்லப்பட்ட வசனத்தின் படி யாரெல்லாம் கர்த்தருக்காக வாழ வேண்டும் என்று நினைப்பார்களோ அவர்களுக்கெல்லாம் தம்முடைய ஆவியை ஊற்ற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இரக்கமுள்ளவராயிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்

4.  பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் பெலன்கள் என்ன?

1.கர்த்தரைக் குறித்ததான சரியான வெளிப்பாட்டை காண்பிக்கிறார் [ லூக்கா 1:6, லூக்கா 1:67-79. லூக்கா 1 ஆம் அதிகாரம் 5 மற்றும் 6 ஆம் வசனத்தில் சகரியா என்னும் மனுஷனைக் குறித்து வாசிக்கிறோம். இந்த மனுஷன் ஆசாரிய வகுப்பில் வந்ததால் கர்த்தருக்கென்று ஆசாரிய ஊழியத்தை செய்கிற ஆசாரியனாக நியமிக்கப்பட்டிருக்கிறான்.

அதுமட்டுமல்லாமல் அவனுடைய ஆசாரிய ஊழியம் எப்படியிருந்தது தெரியுமா? அந்த ஊழியம் நியாயப் பிரமாணம் சார்ந்ததாகவே காணப்பட்டது. சுருங்கச் சொல்லப்போனால் அவன் நியாயப் பிரமாணத்தின் படி நீதிமானாக காணப்பட்டான். ஆகவே அந்த ஊழியத்தையே ஜனங்களுக்கு செய்து வந்தான் எப்படியென்றால் நியாயப்பிரமாணம் என்ன சொல்லுகிறோ அதை மாத்திரம் செய்கிறவனாய் காணப்பட்டான்.

மேலும் தன்னுடைய பிதாக்களின் தேவனையே அறியாமலும் அந்த மகிமையான கர்த்தர் தம்முடைய பிதாக்களிடத்தில் செய்த அற்புதங்களையும் அறியாத ஒரு குருடானக் காணப்பட்டான் ஏன் தெரியுமா? இப்படியாக சொல்லுகிறேன் இந்த மனுஷனிடம் வந்து கர்த்தர் உன் ஜெபத்தைக் கேட்டார் அதுமட்டுமல்லாமல் ஒரு ஆண் குழந்தையையும் கொடுக்க போகிறார் என்று சொன்னவுடனே அந்த மனுஷன் அதை ஏற்றுக் கொள்ளாமல் கர்த்தரை சந்தேகப்பட்டான்.

அந்த சந்தேகம் எப்படியிருந்த்து தெரியுமா? நானும் என் மனைவியும் வயது சென்றவர்கள், எங்கள் சரீரம் எல்லாம் செத்துப் போயிற்று இப்படியிருக்கும் போது எங்கேயிருந்து குழந்தை வரும் என்று சந்தேகப்பட்டான். இந்த மனுஷகுக்கு தெரிய வேண்டாமா தம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் எத்தனை வயதில் குழந்தையைப் பெற்றுக் கொண்டார். நம்முடைய தேவன் உண்மையை மாத்திரம் தானே பேசுவார் எங்கிற ஒரு வெளிப்பாடு இருக்க வேண்டாமா இதற்கு காரணம் இந்த மனுஷனிடம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லை.

ஆனால் வேதம் சொல்லுகிறது, லூக்கா 1: 72 ல் வசனத்தில் இந்த மனுஷன் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் அப்பொழுது இந்த மனுஷனின் ஆவிக்குரிய வாழ்க்கையே மாறிப் போனது என்று பார்க்கிறோம். இதோ இந்த மனுஷன் இயேசுவைக் குறித்து தீர்க்க தரிசினம் சொல்லுகிறார்.

எப்படியென்றால் எல்லாரும் இயேசு கிறிஸ்து எதற்காக இந்த உலகத்திற்காக வந்தார் என்று கேட்டால், உடனே பாவிகளை இரட்சிக்க வந்தார் என்று சொல்லிவிடுவோம் ஆனால் இந்த மனுஷன் சொல்லுகிறான் ஆபிரகாமிற்கு ஒரு வாக்குத்தத்தத்தை செய்து கொடுத்தார் நீ உத்தமனாய் நடந்து எனக்கு முன்பாக உண்மையுள்ளவானாய் இரு அப்பொழுது உன்னை மாத்திரம் அல்ல உன் சந்ததியையும் ஆசீர்வதிப்பேன் என்பதாக [ ஆதி 17:1-8]. ஆபிரகாம் உத்தமனாக நடந்தார் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டார் ஆனால் இதrகுப் பின்வந்த சந்ததியோ இந்த வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொள்ள பாத்திரமாய் நடக்க வில்லை அதாவது இந்த வாக்குத்தத்தை தேவன் நிறைவேற்ற வேண்டுமானால் உத்தமம் தேவை இதை தேவன் யாரிடமும் பார்க்கவில்லை. ஆகவே இந்த வாக்குத்தத்தம் ரொம்ப நாளாக நிறைவேறாமலே இருந்தது ஆனால் வேதம் சொல்லுகிறது வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர் அதை நிச்சயமாக நிறைவேற்றவார்.

ஆகவேதான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மேல் இருந்த பாவத்தையெல்லாம் அவர் எடுத்துக் கொண்டு இந்த வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொள்ளுகிற நீதிமானாக நம்மை மாற்றுகிறார் என்கிற வெளிப்பாட்டையும் தனக்குப் பிறக்கப் போகிற பிள்ளை எப்படிப்பட்டது என்பதையும் வெளிப்பாடாக பெற்றுக் கொண்டார். இவைகள் எல்லாம் எப்படி நடந்தது அந்த மனுஷன் என்றைக்கு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டாரோ அன்றைய தினத்திலிருந்து என்று நாம் அறிகிறோம்.

எனவே வெளிப்பாடு வேண்டும் மற்றும் தீர்க்கதரிசியாக மாறவேண்டும் என்று விரும்புகிறவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகவே சபைகளில் இயேசு கிறிஸ்துவை மாத்திரம் பிரசங்கிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறவர்கள் முதலில் அவர்களுக்குள் அபிஷேகம் வரும்படியாக ஜெபம் செய்யுங்கள்.

பாருங்கள் நியாயப்பிரமாணத்தைப் போதித்துக் கொண்டிருந்த பவுல் எப்பொழுது அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டாரோ அந்த நாளிலிருந்து இப்படியாக பிரசங்கப் பண்ணுகிறார்.

1கொரி 2:2 – இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்

1கொரி 3:11 – போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

2. ஆத்துமாவிலும் சரீரத்திலும் விடுதலை தருகிறார் [ அப் 3 ஆம் அதிகாரம் ] இந்த அப்போஸ்தலர் 3:2 ல் சப்பாணியாய் அதாவது தாயின் வயிற்றில் இருந்து சப்பாணியாய் வந்த மனுஷனை பற்றிப் படிக்கிறோம். அவனை எந்த இடத்தில் கொண்டு வைக்கிறார்கள் ஆலயத்தின் வாசலில் என்று வாசிக்கிறோம். அப்படி கொண்டு வைக்கப்பட்ட ஆலயத்திலே ஒவ்வொரு நாளும் நல்ல ஆராதனைகளும், மற்றும் விசேஷித்த கூட்டங்களும் நடத்தப்பட்டு கொண்டிருக்கலாம். ஆனால் இந்த வாசலில் உட்கார்ந்திருக்கிற மனுஷனுக்கோ விடுதலையில்லை.

அப்படியென்றால் முதலில் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் யார் என்றால் இந்த ஆலயத்தின் போதகர்களும் விசுவாசிகளும். இவர்களுடைய ஆவிக்குரிய நிலைமையை நன்றாக இந்த மனுஷன் அறிந்து வைத்திருந்தான், எப்படியென்றால் இவர்களிடத்தில் இயேசுவைப் பார்ப்பதற்குப் பதிலாக பென்னையும் வெள்ளியையும் பார்த்தான்.

இதனால் இந்த மனுஷனுக்கு சரீரத்திலும் விடுதலைக் கிடைக்க வில்லை மற்றும் ஆத்துமாவிலும் விடுதலை இல்லை என்று அறிகிறோம். ஆனால் இந்த ஆலயத்தை தேடி இரண்டு பேர் வந்தனர் அவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள் அவர்கள் பெயர் யோவான் மற்றும் பேதுரு. வேதம் சொல்லுகிறது இவர்கள் மேல் வீட்டு அறையில் காத்திருந்து பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றவர்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் நிழல் பட்ட இடத்தில் எல்லாம் அற்புதங்களும் அதிசயங்களும் நடந்தன.

அப்போஸ்தலர் 3:6 ல் வாசிக்கிறோம், அவர்கள் அவனிடத்தில் வந்து நீ எதிர்பார்க்கிற வெள்ளியும் பொன்னும் எங்களிடத்தில் இல்லை ஆனால் அந்த வெள்ளிக்கும் பொன்னுக்கும் சொந்தகாரரான இயேசுவை தருகிறோம் என்று சொல்லி இயேசுவின் நாமத்தினால் அந்த மனுஷனை எழுப்பி விட்டனர் என்று பார்க்கிறோம். இந்த காரியம் எப்படி வந்தது அவர்களுக்குள் இருந்த பரிசுத்த ஆவியினாலே என்று அறிகிறோம்.

வேதம் சொல்லுகிறது, 11கொரி 3:17 – கர்த்தரே ஆவியானவர், கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலை உண்டு.

3.  உலகத்தின் போதையிலிருந்து விடுதலை தருகிறார்

எபேசியர் 5:18 – துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறி கொள்ளாமல் ஆவியினால் நிறைந்து.

இந்த வசனம் என்ன சொல்லுகிறது என்றால் நாம் உலகம் தருகிற மயக்கத்திலிருந்து எழுந்து பரிசுத்த ஆவியினால் நிறைந்து கர்த்தரோடு வாழ வேண்டும்.

முதலில் இந்த உலகத்தின் மயக்கத்திலிருந்து எழுந்திருக்க வேண்டுமானால் நமக்கு தேவ ஆவி தேவை அப்படியில்லாத பட்சத்தில் உலகம் உங்களை மாம்சத்தின் வழியில் அழைத்துச் சென்று நரகத்தை உங்கள் வீடாக மாற்றி விடும் என்பதை மறந்து விட வேண்டாம்.

1கொரி 2:11,12 ன் படி ஒரு உலக மனுஷனால் உலகத்திற்குரிய திட்டங்களை மாத்திரம் அவனால் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் அவன் ஆவிக்குரிய அதாவது தேவன் அவனுக்காகவும் அவனுடைய குடும்பத்திற்காகவும் வைத்திருக்கிற திட்டங்களை அறிய வேண்டுமாமால் அவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பாருங்கள் பவுல் சபைகளில் இருக்கிற விசுவாசிகளிடத்தில் உலகம் கிரியை செய்வதை பார்க்கிறார் அனேகர் சத்தியத்தை அறியாதபடி அவர்களுடைய கண்களை பாரம்பரியமும் இந்த உலகமும் குருடாக்கி வைத்திருப்பதை பார்க்கிறார். இதனால் அவர் இப்படியாக ஜெபிக்கிறார் இந்த ஜனங்களுக்கு பிரகாசமுள்ள கண்களை கொடும் என்பதாக.

உலகத்தின் போதை எப்படிப்பட்டது தெரியுமா? முதலில் சந்தோஷத்தைக் கொடுத்து பின்பு உங்களை நித்திய வாழ்வுக்கு அபாத்திரமாக மாற்றி விடுகிறது. வேதம் சொல்லுகிறது, மாம்சத்திற்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க மாட்டார்கள் ரோமர் 8:8. மேகும் உலகம் நமக்கு மாம்ச சிந்தையை கொடுத்து தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியாமல் செய்து நம்மை அவருக்கு பகைஞராக மாற்றி விடுகிறது. ரோமர் 8:7. 

ஆகவேதான் தேவன் யோவானைக் கொண்டு இப்படியாக எழுதுகிறார், உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள் ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை 1யோவான் 2:15.

எனக்குப் பிரியமான ஜனங்களே தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நிழலில் தங்கி சுகமாய் இந்த உலக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர் இதனால் ஊழியத்தில் அவர்களால் எந்த ஒரு காரியத்திலும் ஜெயத்தை எடுக்க முடியவில்லை என்று பார்க்கிறோம்.

ஆனால் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொர்க்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு அவர்கள் கர்த்தரால் எருசலேமில் காத்திருக்கும்படியாக கேட்கப்பட்டனர். என்ன நடந்தது இதோ உன்னதத்திலிருந்து வந்த உன்னத பலனால் தரிக்கப்பட்டனர். இதன் பிறகு கர்த்தரால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டனர் என்று வேதத்தை வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது.

எனவே ஒவ்வொருவரும் இந்த மகத்தான பரிசுத்த ஆவியானவரை வாழ்க்கையில் அனுமதிப்போம் அதன் பிறகு நம்முடைய வாழ்க்கையில் எவைகைகள் எல்லாம் கஷ்டமாக இருக்கிறதோ அவைகள் எல்லாம் இலகுவாக மாறிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

மாமிசத்தின் படி பிழைத்தால் சாவீர்கள் ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள் ரோமர் 8:13.

மேலும், கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புது பெலன் அடைந்து கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள் நடந்தாலும் சோர்ந்து போகார்கள். ஏசாயா 40:31.

ஒரு காரியத்தை மறந்து விடாதீர்கள், பரிசுத்த ஆவியானவரை யாரெல்லாம் பெற்று கொள்கிறார்களோ அவர்களுடைய........

  • கண்களை கர்த்தர் திறக்கிறார் எதற்கு தெரியுமா வேதத்திலுள்ள அதிசயங்களையும் அற்புதங்களையும் பார்க்கும்படியாக.

  • விடுதலை செய்கிறார் எதற்கு தெரியுமா வேதத்தில் சொல்லப்பட்ட எல்லா ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்படியாக.

  • எழும்பி விடுகிறார், எதற்கு தெரியுமா கர்த்தர் நமக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிற நித்திய விருந்தாகிய நித்திய ஜீவனை அடையும் படியாக என்பதை மறந்து விடாதீர்கள்.

குறிப்பு: பரிசுத்த ஆவியானவருடன் சேர்ந்து ஊழியம் செய்வோம் அப்பொழுதுதான் நாம் எல்லா தேசத்திற்கும் பாஸ்போட், விசா இல்லாமலே ஊழியம் செய்யலாம் எப்படியென்றால் பிலிப்புவை, பேதுரு மற்றும் பவுலை தேவன் ஊழியத்திற்கு கொண்டு சென்றது போல நம்மையும் கொண்டு செல்லுவார்.

தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்

bottom of page