top of page

கர்த்தருடைய வேட்டைக்காரன்

Bro. Edwin Corter (Sohar-Oman)

வேதம் சொல்லுகிறது, ஆகையால் நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக் கொண்டு வனத்துக்குப் போய் எனக்காக வேட்டையாடி-  ஆதியாகமம் 27:3.

எங்களுடைய சபையில் ஒரு போதகர் கொடுத்த செய்தியை இந்த மறைவான மன்னாவில் எழுதி உங்களை மகிழ்ச்சியான பாதையில் நடத்தும்படியாக ஆசைப்படுகிறேன்.

பாருங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் வேட்டைக்காரர்களாக இந்த உலகத்தில் மாற்ற ஆசைப்படுகிறார். ஏனென்றால் பிசாசானவன் எவனை விழுங்கலாம் என்று இந்த உலகத்தில் இரத்த வெறியோடு சுற்றி வருவதை நாம் பார்க்க முடிகிறது. அனேகர் இவனுடைய வேட்டைக்கு பலியாவதை நாம் இன்றைய நாட்களில் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் என்னவென்று யோசிப்பீர்களானால் இவர்கள் இன்னும் ஆவிக்குரிய வாழ்க்கையில் யுத்தத்தைப் பார்த்து ரசிப்பவர்களாக மட்டுமே காணப்படுகின்றனரே தவிர இவர்களுக்கு எப்படி பிசாசை வேட்டையாட வேண்டும் என்பது தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால் அனேக முறை கர்த்தரை விட்டு பின்வாங்கி போகும் நிலைமைக்கு தள்ளப்படுவதை நாம் உணர முடிகிறது. எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே இந்த உலகமானது நம்முடைய நிரந்திர வீடு கிடையாது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். அதுமட்டுமல்லாமல் இந்த உலகம் ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் யுத்தக் களமாய் காணப்படுகிறது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

இனி வருகிற ஒவ்வொரு நாட்களும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு யுத்த நாளாகவே காணப்படும் என்று வேதம் நமக்கு தெளிவாக சொல்லுவதை நாம் பல இடங்களில் வாசிக்க முடிகிறது. ஆகவே நம்மை ஒரு பலமுள்ள வேட்டைக்காரனாக மாற்ற வேண்டும் அப்பொழுது தான் நாம் கர்த்தருக்குப் பிரியமாக வாழ முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பாருங்கள் வேதத்தில் ஏசா என்கிற ஒரு மனுஷனைக் குறித்து வாசிக்கிறோம் அவன் எப்படிப்பட்ட மனுஷனாகக் காணப்பட்டான் தெரியுமா?

வேதம் சொல்லுகிறது, அவன் மிகவும் பலத்த வேட்டைக்காரனாக வாழ்ந்தான் என்று ஆதியாகமம் 25:28ல் நாம் வாசிக்க முடிகிறது. அவன் வேட்டைக்குச் சென்று எப்பொழுதும் வெறுமையாக தன்னுடைய தந்தையைப் பார்க்க வந்ததில்லை. அதாவது அவன் மிகவும் ருசியுள்ள உணவை ஒவ்வொரு நாளும் தன்னுடைய தந்தைக்குக் கொண்டு வந்தான். இதனால் தந்தையும் அவனை மிகவும் நேசித்தான் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது.

நாமும் இப்படிப்பட்ட வேட்டைக்காரனாய் கர்த்தருக்கு முன்பாக வாழும் போது அவர் நிச்சயமாக நம்முடைய வேட்டையில் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.

ஒரு மாமிசமான மனுஷன் தன்னுடைய மகனுடைய வேட்டையில் மகிழ்ந்து இத்தனை ஆசீர்வாதங்களைக் கொடுக்கும் போது நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இதை விடவும் நமக்கு அதிகமான அழிவில்லாத ஆசீர்வாதங்களைக் கொடுக்க முடியும் என்பதில் சிறுதும் சந்தேகமேயில்லை. ஏசாவின் வாழ்க்கை மூலமாக இந்த கர்த்தருடைய வேட்டைக்காரனை உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பிக்க [ அறிமுகப்படுத்துதல் ] ஆசைப்படுகிறேன்.

கர்த்தருடைய வேட்டைக்காரனுக்கு இருக்க வேண்டிய ஆறுவிதமான குண நலன்கள்..

1.  வனாந்திரத்தில் சஞ்சரித்தல்

2.  வாசனை [ நற்மணம் ]

3.  தகப்பனுக்கு பிரியமானவன்

4.  கூழுக்காக சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப் போடுதல்

5.  மிகவும் அழுதான்

6.  மன்னித்தல்

1.  முதல் குண நலன்: வனாந்திரத்தில் சஞ்சரித்தல்

வேதம் சொல்லுகிறது,ஏசா வேட்டையில் வல்லவனும் வனஞ் சஞ்சாரியுமாய் இருந்தான். ஆதியாகமம் 25:27.

இன்று அனேக கிறிஸ்தவர்கள் கர்த்தர் எப்பொழுதும் தங்களை புல்லுள்ள மேய்ச்சல் நிறைந்த இடத்தின் வழியாக நடத்தி செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதற்காக அனுதினமும் ஜெபிப்பதை நாம் பார்க்க முடிகிறது. இதனால் என்ன நடக்கிறது சோதனை காலம் வரும் போது அதாவது தங்களுடைய வாழ்க்கையில் வனாந்திரமான பகுதியை தேவன் அனுமதிக்கும் போது மிகவும் சோர்வடைந்து, எலியாவைப் போல ஒரு சூரைச் செடியின் கீழே போய் மிகவும் களைப் போடும் கலக்கத்தோடும் படுத்துக் கொள்வதைப் நாம் காண முடிகிறது.

கர்த்தருடைய வேட்டைக்காரன் என்பவன் எல்லாப் பகுதியிலும் வேட்டையாடத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுது மாத்திரமே தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நிலைத்திருக்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கமும் இருந்தால் தான் அதற்கு மதிப்பு தரப்படுகிறது.

இதே போலத்தான் ஒரு ஜெயமுள்ள ஆவிக்குரியவனின் வாழ்க்கையில் வறட்சியும் செழிப்பும் இருக்க வேண்டும். அப்படி வாழாதவன் அதாவது எனக்கு செழிப்பு மட்டும் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறவன் நிச்சயமாக கர்த்தருக்காக வாழ முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். [ வேதத்திலும் அனேக உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது ]. 

எனவேதான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு தாம் வாக்குத்தத்தம் பண்ணின தேசத்திற்கு அழைத்துச் சென்றதை நாம் அறிய முடிகிறது, அவர்களை நடத்திச் சென்ற நிலையை அறிவீர்களானால் மிகவும் ஆச்சரியமாக நமக்குத் தோன்றும். வேதம் சொல்லுகிறது, அவர்களை ஒரு கொடுமையான வனாந்திரம் வழியாக நடத்திச் சென்றார் என்பதை நாம் வேதத்தை படிக்கும் போது அறிகிறோம்.

எதற்காக கர்த்தர் அவர்களை இப்படியாக வழி நடத்த வேண்டும், இனிமேல் கர்த்தர் நிமித்தமாக வனாந்தரமான இடம் அவர்களுடைய வாழ்க்கையில் வரும் போதும் தம்முடைய ஜனங்கள் சோர்ந்து போகாமலும் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கையில் இருந்து பின்வாங்கிப் போய் விடக் கூடாது என்பதற்காகவே என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட அனேக சம்பவங்களை அனுமதிப்பார், எதற்காகவென்றல் நாம் எல்லா சூழ் நிலைகளையும் பழக வேண்டும் மற்றும் கர்த்தர் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பாருங்கள் தாவீதின் வாழ்க்கையில் முழுவதும் கர்த்தர் வனாந்தரத்தையே அனுமதித்தார் அவர் மிகவும் புத்திசாலியான வேட்டைக்காரனாக இருந்தப்படியால் அதாவது கர்த்தருக்குள் இருந்தபடியால் அவர் எல்லா சூழ் நிலைகளை சமாளிக்க முடிந்தது அதுமட்டுமல்லாமல் எல்லா இடத்திலும் ஜெயம் எடுக்கவும் முடிந்தது என்பதை வேதத்தை நன்றாக ஆராயும் போதும் அறிய முடிகிறது.

எனக்குப் பிரியமான தெய்வ ஜனங்களே வனாந்திரம் ஒரு மனுஷணை பலசாலியாக மாற்றுகிறது என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்.

வேதம் சொல்லுகிறது, அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திரத்திற்குக் கொண்டு போகப்பட்டார். மத்தேயு 4:1. இந்த வனாந்திர வாழ்க்கைக்கு பிறகு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்னும் வல்லமையாக மாறினார் என்று பார்க்கிறோம்.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே சில நேரங்களில் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையிலும் வனாந்திரமான பகுதியை அனுமதிக்கிறார் எப்படியென்றால் நம்முடைய நண்பர்கள் மூலமாகவோ அல்லது நம்முடைய குடும்பத்தில் வருகிற பிரச்சனைகள் மற்றும் பிரிவினைகள் மூலமாகவோ அல்லது பணத்தின் வழியாகவோ வனாந்தரத்தை அனுமதிக்கிறார் எதற்காக தெரியுமா? நாம் வேட்டையின் அனைத்து நுட்பங்களையும் தெரிந்து கொண்டு ஒரு நல்ல வேட்டைக்காரனாக மாற வேண்டும் என்பதற்காக என்பதை மறந்து விடாதீர்கள்.

2.  இரண்டாவது குண் நலன்: வாசனை

வேதம் சொல்லுகிறது, அவன் கிட்டப் போய் அவனை முத்தஞ்செய்தான் அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து இதோ என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப் போல் இருக்கிறது. ஆதியாகமம் 27:27. 

ஈசாக்கு தன் மகனாகிய ஏசாவை கண்டுபிடிக்கிற குண நலன்களில் ஒன்றுதான் அவன் மேல் இருந்த ஒருவிதமான வாசனை அதாவது அந்த வாசனை வயல்வெளியில் வாசனையைப் போல் இருந்தது என்று வேதம் சொல்லுவதை நாம் பார்க்க முடிகிறது.

இதே வாசனையை கர்த்தரும் தம்முடைய பிள்ளைகளிடத்தில் எதிர்பார்க்கிறார். இன்று ஏன் கர்த்தர் நம்மை அவருடைய பிள்ளைகளாக கண்டு கொள்ளமுடியவில்லை அதாவது ஏன் அங்கீகரிக்க முடியவில்லை நம்மேல் பாவம் என்கிற அருவருக்கத்தக்க வாசனையே அதிகமாக வீசிக் கொண்டிருக்கிறதே இதற்கு மிகவும் முக்கியமான காரணம் ஆகும்.

அவருக்கு பிரியமில்லாத வாசனையை நம்முடைய வாழ்க்கை என்கிற பொற்கலசங்களில் நிரப்பி வைத்திருப்பதினால் நாம் ஜெபிக்கிற ஜெபமும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி எட்டாதப்படிக் காணப்படுவதை நாம் பார்க்க முடிகிறது.

அப்படியென்றால் எப்படிப்பட்ட வாசனை கர்த்தரை சென்று எட்டுகிறது என்றால், வேதம் சொல்லுகிறது, பரிசுத்தவான்கள் செய்கிற ஜெபமோ தூபவர்க்கமாக மாற்றப்பட்டு அது தேவனுடைய பொற்கலசங்களில் நிரப்பப்பட்டு அவருக்கு சுகந்த வாசனையைக் கொடுக்கிறது என்று வெளி 5:8 ஆம் வசனத்தில் நாம் வாசிக்க முடிகிறது.

அதுமட்டுமல்லாமல், இந்த பரிசுத்தமான வாசனை இல்லாதவன் கர்த்தருக்குப் பிரியமாக இருக்க முடியாது என்று எபிரெயர் 12:14 ல் எழுதப்பட்டுள்ளது.

பாருங்கள் பழைய ஏற்பாட்டு காலத்தில் கர்த்தருக்கு தூபம் காட்டும் போது அந்த தூபக் கலசங்களில் கர்த்தருக்கென்று பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட வாசனை திரவியங்கள் வைக்கப்பட்டிருக்கும். அதை செய்கிறவர்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். அதின் கலவையும் கர்த்தர் சொன்ன அளவின் படியே இருக்க வேண்டும் என்பது அன்றைய நாட்களில் ஒரு நியமமாகவே இருந்தது. அந்த கலவையில் ஒன்று குறைந்து போனால் கூட அது அருவருப்பான வாசனையாக கர்த்தருக்கு முன்பாக மாறி விடுகிறது என்று வேதம் நமக்கு தெளிவுப்படுத்துவதை பழைய ஏற்பாட்டில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

எனக்குப் பிரியமான கர்த்தருடைய பிள்ளைகளே நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். அது சுகந்த வாசனையாகக் காணப்படுகிறதா அல்லது அருவருப்பான வாசனையாக காணப்படுகிறதா? என்பதை சிந்தியுங்கள்.

கர்த்தர் நம்மை தினமும் நுகர ஆசைப்படுகிறார் அதாவதும் முத்தம் செய்ய ஆசைப்படுகிறார். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிற கர்த்தருக்குப் பிரியமில்லாத அதாவது செயற்கையான வாசனை திரவியத்தை தூக்கி எறிந்து விட்டு, கர்த்தர் நமக்கு தந்த பரிசுத்தமான இயற்கையான வாசனை நிறைந்த திரவியத்தை வைத்துக் கொள்வோம். அப்பொழுது மாத்திரமே கர்த்தர் உன் பக்கத்தில் வர முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாம் எப்பொழுதும் வாசனை நிறைந்த திரவியமாக மாற வேண்டுமானால் வேதம் சொல்லுகிறது, உங்களைக் கழுவி சுத்திகரியுங்கள் உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றி விட்டு தீமை செய்தலை விட்டு ஓயுங்கள். மேலும், நன்மை செய்யப் படியுங்கள். ஏசாயா 1:16,17.

3.  மூன்றாவது குண நலன்: தகப்பனுக்குப் பிரியமானவன்

ஏன் ஏசாவை தகப்பனுக்குப் பிரியமானவனாக வேதம் காட்டுகிறது தெரியுமா? அவன் தன் தந்தை என்ன சொன்னாலும் அதை உடனே செய்கிறவனாய் காணப்பட்டான்.

வேதம் சொல்லுகிறது, ஆகையால் நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக் கொண்டு வனத்துக்குப் போய் எனக்காக வேட்டையாடி அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து நான் புசிக்கவும் நான் மரணம் அடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும் என்னிடத்தில் கொண்டு வா என்றான். ஆதி 27:3,4 பாருங்கள் தன்னுடைய தந்தையின் வார்த்தையை கேட்ட மாத்திரத்தில் உடனே அதை நிறைவேற்றுவதற்காக ஆயத்தமானான். எப்படியென்றால் வேதம் சொல்லுகிறது,ஏசா வேட்டையாடிக் கொண்டுவரும்படி வனத்துக்குப் போனான். ஆதி 27:5 [பிப] ஆகவேதான் இந்த ஏசா தன்னுடைய தந்தை பிரியப்படுகிற ஒரு பாத்திரமாகக் காணப்பட்டான் என்று நாம் அறிய முடிகிறது. இதே போலத்தான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் காணப்படுகிறார், எப்படியென்றால் யார் தனக்கு பிரியமாக நடந்து, தாம் சொன்ன எல்லா வார்த்தைகளின்படி செய்கிறார்களோ அவர்களையே தன்னுடைய பிள்ளையாக அங்கீகரிக்கிறார் என்று வேத வாக்கியங்கள் அறிவிக்கிறது.

இத்தகைய காரியத்தை ஒரு வேதப் பகுதியிலிருந்து பார்க்கலாம், வேதம் சொல்லுகிறது,இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில் அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேச வேண்டுமென்று வெளியே நின்றார்கள்.

அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் பேச வேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான் தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். மத்தேயு 12:46-50. 

நாம் கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளின் படி நம்முடைய வாழ்க்கையை அமைத்திருக்கிறோமா என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் கர்த்தருக்குப் பிரியமில்லாத எந்தவொரு காரியமும் நம்மிடத்தில் காணப்படுமானால் இப்பொழுதே அதையெல்லாம் எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு விடுங்கள். அப்பொழுது மாத்திரமே நாம் நம்முடைய தகப்பனுக்கு பிரியமான பிள்ளையாக மாற முடியும்.

பாருங்கள் தாவீது ராஜா கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தத்திற்கு எப்பொழுது சொந்தக்காரராக மாறினார் அவர் கர்த்தர் தனக்குக் கற்பித்த வழிகளின் படி நடந்து அவரை எப்பொழுதும் சந்தோஷப்படுத்துகிற ஒரு மகனாகவே காணப்பட்டான், இதனிமித்தமே கர்த்தர் தாவீதிற்கு அதாவது காடு மலை என்று அலைந்து கொண்டிருந்தவருக்கு ஒரு நிலையான வீட்டைக் கட்டித் தந்தார். இதே போல நாமும் அவருக்குப் பிரியமாக வாழும் போது கர்த்தர் நாம் விரும்புகிறதை செய்து தருவார் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.

ஆகவே நாம் எப்பொழுதும் ஜெபிக்க வேண்டிய முக்கியமான ஜெபம் என்னவெனில், ஆண்டவரே உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குக் கற்றுத் தாரும் அதுமட்டுமல்லாமல் உம்முடைய வழிகள் என்ன என்றும் அவரிடத்தில் கேட்க வேண்டும். அப்பொழுது மாத்திரமே நம்முடைய கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் கர்த்தருக்கு பிரியமானவன் என்கிற பட்டமும் நமக்கு கிடைக்கும்.

4.  நான்காவது குண நலன்: கூழுக்காக சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப் போடுதல்

ஒரு நாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்த போது யாக்கோபு கூழ் சமைத்துக் கொண்டிருந்தான் அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி அந்த சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா இளைத்திருக்கிறேன் என்றான் இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று அப்பொழுது யாக்கோபு உன் சேஷ்ட புத்திர பாகத்தை இன்று எனக்கு விற்றுப் போடு  என்றான் அதற்கு ஏசா இதோ நான் சாகப் போகிறேன் இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான். ஆதியாகமம் 25:29-32.

 

மேலே சொல்லப்பட்ட வசனத்திலிருந்து சில காரியங்களை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தன்னுடைய வாழ்க்கையில் மேன்மையாக இருந்த அந்த சேஷ்ட புத்திரபாகத்தை அந்த கூழுக்காக அற்பமாக நினைத்தான் இந்த ஏசா ஏனென்றால் அந்த நேரத்தில் அவனுக்கு அந்த சேஷ்டப் புத்திரபாகத்தை விட தன்னுடைய உயிரே மேன்மையாக அவனுக்குத் தெரிந்தது.

இன்று அனேகர் கர்த்தர் தங்களுக்கு தந்த ஆசீர்வாதத்தையே பெரிதாக நினைத்து அந்த ஆசீர்வாதத்தைத் தந்த இயேசுவை அலட்சியமாக நினைப்பதை இந்த நாட்களில் பார்க்க முடிகிறது. சிலர் தங்களுடைய நண்பர்களையும் தங்கள் குடும்பத்திலுள்ள நபர்களையும் இயேசுவை விட அதிகமாக நேசிப்பதை நாம் பலருடைய வாழ்க்கையில் காண முடிகிறது.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைக்காதேயுங்கள் இவைகள் எல்லாம் ஒரு நாள் அழிந்து போகப்போகிறது. இவைகள் மேல் நம்பிக்கை வைக்கிற மனுஷனை வேதம் மூடன் என்று அழைக்கிறது.

பாருங்கள் நியாயப்பிரமாணம் தான் பெரியது என்று தன்னுடைய வாழ்க்கையில் நினைத்துக் கொண்டிருந்தவன் அப்,பவுல், இதற்காக அவன் இயேசுவின் பிள்ளைகளை கூட கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தான் என்று வேதம் சொல்லுகிறது. அனேக கிறிஸ்தவ சபைகளை சின்னா பின்னாமாக வேட்டையாடினான் இந்த பவுல் என்று சொன்னால் அது மிகையாகாது.

இதன் பிறகு என்ன நடந்தது மெய்யான தேவனாகிய கர்த்தர் ஒரு நாள் அவனுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டார். இதோ இயேசுதான் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர் என்றும் அவர் இல்லாமல் தன்னுடைய ஜீவன் பரலோகத்திற்கு செல்ல முடியாது என்பதையும் அறிந்து கொண்டான். இதோ இயேசுவை நோக்கி பயணம் செய்ய தொடங்கினார். இதற்காக அவர் செய்த அர்ப்பணிப்புகள் மற்றும் தியாகம் என்னத் தெரியுமா?

வேதம் சொல்லுகிறது, ஆகிலும் எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.

அதுமாத்திரமல்ல என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். பிலிப்பியர் 3:7,8. மேலும் அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன் குப்பையுமாக எண்ணுகிறேன். பிலிப்பியர் 3:11. அதுமட்டுமல்லாமல், கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம். பிலிப்பியர் 1:21. இதனால்தான் அப்,பவுலால் ஒரு வெற்றியுள்ள ஆவிக்குரிய வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க முடிந்தது. இன்று அனேகர் உலகத்தை அதிகமாக நேசிப்பதால் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் மரித்தவனைப் போல வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் பலருடைய வாழ்க்கையில் பார்க்க முடிகிறது.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே இயேசு கிறிஸ்து நமக்கு வேண்டுமானால் நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவுக்காக எதையும் இழக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். இன்று அனேகர் வெள்ளி பொன்னு மற்றும் பணத்திற்காக தங்களுடைய உயிரையே கொடுத்து வேலை செய்வது உண்டு. இதனால் இவர்களுக்கு கிடைப்பது நித்திய மரணமாய் இருக்கிறது. ஆனால் சிலர் கர்த்தரை நெருங்குவதற்காக தன்னிடத்தில் இருக்கிற எல்லாவற்றையும் இழந்து கர்த்தருக்காக வாழ்வதை பார்க்க முடிகிறது. இதனால் இவர்களுக்கு கிடைப்பது நித்திய ஜீவன் என்பதை மறந்து விடாதீர்கள். விழித்து கொள்ளுங்கள் உங்களிடம் இருக்கிற உலகம் என்கிற சேஷ்ட புத்திரபாகத்தை நம்முடைய உயிரைப் பாதுகாப்பதற்காக கொடுக்கப்பட்ட இயேசு என்கிற ஜீவ அப்பத்தை ருசிப்பார்ப்பதற்காக விற்றுப் போடுங்கள். அப்பொழுது பிழைப்பீர்கள் என்று வேதம் சொல்லுகிறது.

5.   ஐந்தாவது குண நலன்: மிகவும் அழுதான்

வேதம் சொல்லுகிறது, ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடனே மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி தன் தகப்பனை நோக்கி என் தகப்பனே என்னையும் ஆசீர்வதியும் என்றான். ஆதியாகமம் 27:34.

ஏசா ஏன் இப்படி கதற வேண்டும் ஏனென்றால் அந்த நாட்களில் தங்கள் பிதாக்கள் தருகிற ஆசீர்வாதங்கள் தேவனிடத்திலிருந்து வந்த ஆசீர்வாதத்தைப் போன்றது. அதுமட்டுமல்லாமல் அந்த ஆசீர்வாதமே கர்த்தர் ஒருவனுக்கு கொடுக்கிற ஆசீர்வாதமாகக் கருதப்படும். ஆகவே தன் தகப்பன் மூலமாய் கிடைக்கிற ஆசீர்வாதங்களில் ஒன்றாவது தனக்கு கிடைத்து விடாதா என்று கதறுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இன்று கர்த்தருடைய கையினால் உருவாக்கப்பட்ட அனேக ஆத்துமா செல்வங்கள் நமக்கு முன்பாக அழிந்து போய் கொண்டிருப்பதை நாம் ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சிலர் கடமைக்காக அவர்களுக்காக ஜெபிப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் ஆத்துமா பாரத்துடன் கதறி அழுகிற வேட்டைக்காரர்களை இன்றைய நாட்களில் பார்க்க முடியவில்லை. ஏன் தெரியுமா? இவர்களுக்கெல்லாம் கர்த்தர் உருவாக்கின ஆத்துமா செல்வங்களை விட இவ்வுலகத்தின் செல்வங்களே அவர்களுடைய கண்களுக்கு உயர்வாக இருக்கிறது.

பாருங்கள் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமக்கு விரோதமாக அனேக கொடுமையான காரியங்களைச் செய்த ஜனங்களுக்காக கடைசி வரை சிலுவையில் போராடினார் என்று வேதம் நமக்கு தெளிவுப்படுத்துவதைப் பார்க்கிறோம். எதற்காக அந்த ஆத்துமாக்களின் விலை எப்படிப்பட்டது என்பதை அவர் அறிந்திருந்தபடியால்., அதே போலத்தான் ஸ்தேவான் என்கிற கர்த்தருடைய ஊழியக்காரனும் தனக்கு விரோதமாக கொடுமையான தண்டனையை வழங்கிய ஜனங்களுக்காக கடைசி நேரத்தில் கூட ஒரு ஆத்துமா பாரத்தோடு ஜெபம் பண்ணினதை நாம் அப்போஸ்தலர் 7 ஆம் அதிகாரத்தில் வாசிக்க முடிகிறது.

நாமும் இதேபோல கதறி ஜெபிக்கவில்லை என்றால் நாளைக்கு இதே நிலைமை ஒருவேளை நமக்கு வரும் போது நமக்காக கதறி ஜெபிக்கிறவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

இப்படியாக யாரெல்லாம் கண்ணீர் விட்டு ஆத்துமாக்களுக்காக இந்த உலகில் வேட்டையாடுகிறார்களோ அவர்களுக்கு மாத்திரமே கர்த்தர் அதிக ஆத்துமாக்களைப் பரிசாக கொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு தன்னுடைய ராஜ்ஜியத்தில் ஒரு நல்ல பதவியை ஆயத்தமாக்கி வைக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.

வேதம் சொல்லுகிறது, இதோ தாம் அதிகமாக நேசித்த லாசரு மரித்துப் போனான் என்கிற செய்தியைக் கேட்ட நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கண்ணீர் விட்டார் என்று யோவான் 11:35 நமக்கு சொல்லுகிறது. அதுமாத்திரமல்ல தன்னுடைய போதகத்தைக் கேட்டு மனந்திரும்பாத எருசலேமை இயேசு வந்து பார்த்த போது என்ன நடந்தது தெரியுமா?

வேதம் சொல்லுகிறது, அவர் [ இயேசு கிறிஸ்து ] சமீபமாய் வந்த போது நகரத்தைப் பார்த்து அதற்காக கண்ணீர் விட்டார். லூக்கா 19:41.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்ளே நாம் கர்த்தருடைய உண்மையான வேட்டைக்காரர்களாக இருக்க வேண்டுமானால் பாரமுள்ள இருதயம் நமக்கு நிச்சயம் வேண்டும் அதாவது நம்முடைய வாழ்க்கை அன்பினால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது மாத்திரமே நம்முடைய இருதயம் உடைந்து ஆத்துமாக்களுக்காக கண்ணீர் சிந்த முடியும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்,.

  

வேதம் சொல்லுகிறது, சீயோன் குமாரத்தியின் மதிலே இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு ஓய்ந்திராதே உன் கண்ணின் கறுப்பு விழி சும்மாயிருக்கவொட்டாதே எழுந்திரு இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றி விடு எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப் போகிற உன் குழந்தைகளின் பிராணுக்காக உன் கைகளை அவரிடத்தில் ஏறெடு. புலம்பல் 2:18.19.

6.   ஆறாவது குண நலன்: மன்னித்தல்

பாருங்கள் தன்னுடைய சகோதரனாகிய யாக்கோபு தன்னை ஏமாற்றி விட்டான் என்று அறிந்த ஏசா தன்னுடைய தகப்பனுடைய மறைவிற்கு பின்பு அவனை பழிவாங்குவேன் என்று தன்னுடைய இருதயத்தில் தீர்மானம் வைத்திருந்தான் ஆனால் பிறகு என்ன நடந்தது, வேதம் சொல்லுகிறது, அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடி வந்து அவனைத் தழுவி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவனை முத்தஞ் செய்தான் இருவரும் அழுதார்கள். ஆதியாகமம் 33:4.

இந்த வார்த்தையின் மூலம் நாம் என்ன கற்றுக் கொள்ள முடிகிறது, ஏசா தன் சகோதரனை முழுவதும் மன்னித்து விட்டான் என்று அறிகிறோம்.

கிறிஸ்தவ வேட்டைக்காரர்களுக்கு இருக்க வேண்டிய குண நலன்களில் ஒன்று மன்னிப்பு என்கிற குண நலன் ஆகும். மன்னிப்பு என்கிற குண நலன் ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் இல்லாவிட்டால் அவன் பொய்யான ஒரு ஆவிக்குரிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான் என்று அர்த்தமாகும்.

பாருங்கள் பேதுரு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் சென்று தன்னுடைய சகோதரன் தனக்கு விரோதமாக ஒரு குற்றம் செய்தால் அவனை எத்தனை தடவை மன்னிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது அதற்கு கர்த்தர் அவனுக்குக் கொடுத்தப் பதில் என்ன தெரியுமா?

ஏழு எழுபது தடவை அதாவது மன்னித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது இந்த வாக்கியத்தின் அர்த்தமாகும். ஏன் இன்று ஒருவருக்கொருவர் கசப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மிடத்தில் இந்த மன்னிக்கிற குண நலன் இல்லாததே இதற்குக் காரணம் ஆகும்.

பாருங்கள் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களை மன்னிக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாம் இன்னும் கேட்டின் பிள்ளைகளாய் வாழ்ந்து கொண்டிருப்போம் என்பதை மறந்து விடாதீர்கள்.

வேதம் சொல்லுகிறது, ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். எபேசியர் 4: 32

மேலும், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். மத்தேயு 5:44.

எனக்குப் பிரியமான தேவ பிள்ளைகளே நாம் கர்த்தருக்காக வாழ வேண்டுமானால் இந்த உலகத்தில் நல்ல வேட்டைக்காரர்களாக மாற வேண்டும். நல்ல வேட்டைக்காரர்கள் எப்படி இருப்பார்களானால் மேலே சொல்லப்பட்ட இந்த ஆறுவிதமான குண நலன்களை தங்களுடைய வாழ்க்கையில் எப்பொழுதும் பின்பற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களே கர்த்தருக்கு நல்ல உணவாக மாற முடியும். இவர்களையே கர்த்தருடைய வேட்டைக்காரர்கள் என்று அழைக்க முடியும்.

கர்த்தர் தாமே இந்த செய்தியின் மூலம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்!

 

ஜெபம்:

எங்கள் அன்புள்ள இயேசு சுவாமி, நீர் எங்களோடு இந்த வார்த்தைகளைக் கொண்டு பேசினீரே அதற்காக கோடான கோடி நன்றி அதுமட்டுமல்லாமல் இப்படிப் பட்ட மன்னாவை எங்களுக்கு இலவசமாக தந்தீர் அதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். அதுமட்டுமல்லாமல் இந்த வார்த்தைகளை நாங்கள் வாசிக்கிறவர்களாக மாத்திரமல்லாமல் இந்த மன்னாவில் சொல்லப்பட்ட அந்த பாத்திரமாகவே மாறுவதற்கு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறோம். இன்னும் அனேக வெளிப்படுகளை எங்கள் செய்தியில் கொடுக்க வேண்டும் என்று எங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறோம். ஆமென்!

bottom of page