top of page

பிதாவாகிய தேவன் கிறிஸ்துவுக்கு தலையானவரா?

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தவிர நாம் இரட்சிக்கபடுவதற்கு வேறு நாமம் கொடுக்கபடவில்லை என்பது உண்மை தான். நாம் வேதாகமத்தை படிக்கும் போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரங்களை பெற்றவராக இருந்தாலும் அவர் பிதாவாகிய தேவனுக்கு கீழ்பட்டவராகவே இருக்கிறார். இயேசு கிறிஸ்து பிதாவின் சித்தம் செய்யவே வந்தேன் என்றார்.(நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். யோவான் 12:49).

 

பிதாவை உலகத்துக்கு வெளிப்படுத்தி என்னை கண்டவன் பிதாவை கண்டான் என்றார்.அவர் பிதாவை நோக்கி ஜெபித்தார். பரமண்டல ஜெபத்தில் பிதாவை நோக்கி ஜெபிக்க சொன்னார், பிதாவை தொழுது கொள்ள சொன்னார், பிதாவை மகிமைபடுத்தினார், பிதா எதை பேச சொல்கிறாரோ அதை பேசுகிறேன் என்றார்,தன் ஆவியை பிதாவிடம் ஒப்பு கொடுத்தார், சகல  அதிகாரங்களும் பிதாவால் எனக்கு ஒப்பு கொடுக்கப்பட்டது என்றார். ஆனால் சில அதிகாரங்கள் என்னிடத்தில் இல்லை பிதாவின் ஆதீனத்துக்கு அடுத்த விஷயம் என்றார். பிதாவை கனம் பண்ண வேண்டும் என்றார்.பிதா தாமே ஒருவருக்கும் நியாயதீர்ப்பு செய்யாமல் நியாயதீர்ப்பு செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்பு கொடுத்தார் என்றார். (யோவான் 5-22-23)என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார். யோவான் 8:29


இயேசுவை தேவன் ஆண்டவரும் இரட்சகருமாக்கினார் என்று அப் 2-36 ல் பார்க்கலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் அடிமையின் ரூபமெடுத்து மனித சாயலாகி தன்னை தானே தாழ்த்தினபடியால் வானத்திலும் பூமியிலும் உள்ளவர்கள் வணங்கும்படியாக எல்லா நாமத்துக்கும் மேலான இயேசு என்ற நாமத்தை கொடுத்தது பிதாவாகிய தேவனே.(பிலி2-9-11 பார்க்க)


பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்று இயேசு சொன்னார். மத்தேயு 11:25


தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர். யோவான் 6:46


தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். யோவான் 1-18  

 

ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும் ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். 1 கொரிந்தியர் 11-3)
 

(இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார், இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களை உண்டாக்கினார். எபிரேயர் 1-2) சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார். 1 கொரிந்தியர் 15-28   )மேற் சொல்லபட்ட வசனத்தின்படி பிதாவாகிய தேவனே சகலத்துக்கும் சகலமாயிருக்கிறார் இயேசு கிறிஸ்து அவருக்கு கீழ்பட்டிருப்பார் என்பதை தெளிவாக விளங்கி கொள்ளலாம். ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்து வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரங்களும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார், அதன் பின் எக்காலத்தில்  இஸ்ரவேலுக்கு ராஜ்ஜியத்தை திரும்ப கொடுப்பீர் என்று சீஷர்கள் கேட்ட போது      அதற்கு அவர்; பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.        (அப்போஸ்தலர் 1:7) மற்றொரு சம்பவத்தில் மறுமையிலே என் வலது புறத்திலும் இடது புறத்திலும் உட்கார சொல்லும் அதிகாரம் பிதாவிடமே இருக்கிறது என்றார். இயேசு அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில்; நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள், ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். மத்தேயு 20:23 .

 

இரண்டு சம்பவங்களில் என்னை விட என் பிதா பெரியவராயிருக்கிறார் என்றார்.    அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. யோவான் 10-29 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். யோவான் 14-28.

 

பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். மாற்கு 14:61.


 அதற்கு இயேசு: நான் அவர் தான்: மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். அல்லேலுயா. மாற்கு 14:62.

 

அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார். தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது 1 பேதுரு 3-22 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது, பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான், குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான். மத்தேயு 11-27

 

பரிசுத்த ஆவியால் நிறைந்திருந்த ஸ்தேவான் வானம் திறக்கப்பட்டு பிதாவையும் குமாரனையும் தரிசித்தான்,இங்கு தெய்வத்துவத்தின் முப்பரிமாணத்தை காணலாம். இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்த போது அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்ப பட்டார், அப்பொழுது வானம் திறக்கப்பட்டது. பிதாவானவர்  இவர் என் நேசக்குமாரன் என்று சொன்னார். இங்கும் தெய்வத்துவத்தின் முப்பரிமாணம் வெளிப்படுவதை அறியலாம். மூன்றாம் வானம் வரை எடுத்து கொள்ளப்பட்ட  பவுல் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை செலுத்துகிறான். பரலோகத்துக்கு எடுத்து கொள்ளபட்ட யோவான் அங்கு பிதாவையும் குமாரனாகிய ஆட்டு குட்டியானவரையும் தரிசித்தான்.ஆவியானவரின் சத்தத்தையும் கேட்டான், பிதாவையும் குமாரனையும் மறுதலிப்பவனே அந்தி கிறிஸ்து என்று வேதம் தெளிவாக சொல்கிறது. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 1 யோவான் 2:22.

 

அதன்பின்பு முடிவு உண்டாகும். அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். 1 கொரிந்தியர் 15-24.


கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக.  2 கொரி 13-14.

 

நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்டைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக. 1தெசலோனிக்கேயர் 3-11

 

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்உண்டாவதாக. 1 பேதுரு 1-3.


பிதா குமாரன் பரிசுத்தாவியானவர் மூவரும் வணக்கத்துக்குறியவர்களே.திரித்துவம் எனற திரியேக தேவன் என்பதே வேதாகமத்தின் அடிப்படை சத்தியம்.    (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். 1 யோவான் 5:7.


இதை மீறி இயேசு மாத்திரம் பிதா மாத்திரம் என்று போதிக்கிறவர்கள் கள்ள போதகர்கள்.இவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள், இவர்கள் வேதாகமத்தை புரட்டுகிறவர்கள்,  இவர்கள்  ஜனங்களை வஞ்சிக்கிறார்கள், இவர்களை விட்டு உடனடியாக விலகுங்கள்.  ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். யோவான் 17-3.


ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்கள் சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்.  அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று  பூர்வத்திலே எழுதியிருக்கிறது. யூதா 1-4

 

வேதாகமத்தில் சொல்லப்பட்ட வசனத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக தியானியுங்கள். பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும்   தெரிந்துகொள்ளப்பட்ட   பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. 1 பேதுரு 1-2 5

 

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும், ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 3:5.

 


நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம். எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. 1 யோவான் 1:3. 


தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரபிரகாரமாக கிறிஸ்துவுக்குள் வாசமாயிருக்கிறது. கொலோ 2-9 ஆமென் ஆமென்.

bottom of page