top of page

சாதி எங்கள் பிறப்புரிமை, அதை நாங்கள் நரகத்துக்கு போனாலும் விட மாட்டோம்!!

 

சமுதாயம் என்ற பெயரில் விக்கிரகத்தின் ஆணி வேரான சாதியத்தை மறைமுகமாக செயல்படுத்தும் ஊழியக்காரர்களே விசுவாசிகளே...!

 

சத்தியத்தை அறியாமல் சாதி என்கிற சாத்தானியத்தில் அடிமைபட்டு கிடக்கும் உங்களுக்கு  ஊழியம் செய்ய தகுதியில்லை.

 

உங்களுக்கு  உங்கள் சாதி பெரியதாக இருந்தால், ஊழியத்தை விட்டு விட்டு சாதி சங்கத்தை ஆரம்பித்து அதற்காக கொடி பிடிக்கலாம்.

 

கிறிஸ்துவுக்கும் விக்கிரகத்தின் அடிப்படையான சாதிக்கும் சம்பந்தமில்லை. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது.ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது.

 

நாங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்று சொல்லி கொண்டு குடும்பத்தில் சாதி பார்த்து திருமணம் செய்து ஊழியத்தை செய்து கொண்டிருப்பவர்களே தயவுசெய்து மனம் திரும்புங்கள். நீங்கள் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேளுங்கள். சாதி என்பது இந்துத்துவா கொள்கையின் அடிப்படையான விக்கிரகத்தின் ஆணிவேர்.

 

பிரம்மாவின் சரீரத்தில் இருந்து சாதிகள் பிறந்தது என்பது இந்துத்துவாவின் கொள்கை.இதை மறுக்கிறீர்களா அல்லது ஆதரிக்கிறீர்களா?நீங்கள் சாதி பார்க்கிறீர்களென்றால் அதை ஆதரிக்கிறீர்கள்.

 

 

இந்தக் கொள்கையின் படி பிரம்மாவின் அதாவது அந்நிய நுகமான  விக்கிரகத்துடன் பிணைக்கப்படுகிறீர்கள் என்பது உண்மை. சாதியம் பற்றிய காரியங்கங்களை படித்தீர்களென்றால் எந்த உண்மை கிறிஸ்தவனும் சாதி பார்க்க மாட்டான்.

இன்றைக்கு இத்தகய சாதிய அடிமைத்தனம் தவறானது அதை யாரும் கடைப்பிடிக்க கூடாது என்று ஏன் ஊழியக்காரர்கள் தங்கள் சபைகளில் போதிப்பதில்லை தெரியுமா?அப்படி போதித்தால் சாதிய அடிமைதனத்தில் மூழ்கி போயிருக்கும் பல விசுவாசிகள் காணாமல் போய்விடுவார்கள். அதாவது சபையில்  எண்ணிக்கை குறைந்து விடும் என்பதே. இப்படிப்பட்ட குருட்டு விசுவாசிகளுக்கு வழிக்காட்டும் குருட்டு போதகர்கள்,தாங்கள் போகும் இடம் எங்கே என்று அறியாமல் இருக்கிறார்கள்.

 

மனிதர்களை தீண்டதகாதவர்கள் தாழ்ந்தவர்கள் என்று தரக்குறைவாக கருதி அவர்களை பிரித்தாளும் சாத்தானியத்தின் மறைமுகமான இருளின் அதிகாரம் தான் சாதியம்.விக்கிரகத்திலிருந்து வந்த சாதிய கொள்கையை அங்கிகரித்து சாதியத்தை வைராக்கியமாக  கடைப்பிடிக்கும் கிறிஸ்தவனே நீ மனம் திரும்பு.

 

சாதியத்தை இன்னும் நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்றால் இன்னமும் உங்கள் ஊழியத்தில் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் இன்னும் உங்கள் இருதயத்தில் சாதி உணர்வு இருக்கிறது என்றால் தயவு செய்து ஊழியத்தை விட்டு விட்டு வெளியே போய் விடுங்கள்.

நரகத்துக்கு போனாலும் பரவாயில்லை,சாதியத்தை விட முடியாது என்று சொல்கிறீர்களா?

 

வசனம் தெளிவாக சொல்லுகிறது அப்போஸ்தலர் 10 வது அதிகாரம் 28 வது வசனத்தில்  எந்த மனுஷனையும் தீட்டுள்ளவன் என்றும் அசுத்தன் என்றும்  நான் சொல்லாத படிக்கு தேவன் எனக்கு காண்பித்திருக்கிறார்

 

மேற் சொல்லப்பட்ட வசனத்தை நன்கு படியுங்கள்.

 

இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்களும் போதகர்களும், பிறரை தீண்டதகாதவர்கள் என்று கருதும் சாதியம் என்கிற விக்கிரகத்தின் அடிமைத்தனத்தில் தான் இருக்கிறார்கள்.

ஆழ்ந்த சத்தியத்தை போதிக்கிறோம் சத்தியத்தில் நடக்கிறோம் என்று பெருமை பேசுகிற சபைகளின் ஊழியக்காரர்கள் மற்றும் முன்னணி மூப்பர்கள் கூட சாதி பார்க்கிறார்கள்.

 

கடந்த வாரம் தமிழ்நாட்டில் ஒரு இந்து மத தலைவர், கிறிஸ்தவ சாதி சங்கங்களை மூடாவிட்டால் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தார்.

 

பல தலைமுறைகளுக்கு முன்பாக கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் அநேகர் சாதியின் மூலம் அரசாங்க சலுகைகளை அனுபவித்து கொண்டு அரசாங்கத்தை ஏமாற்றுவதாக தெரிவித்தார். உடனே இதை குறித்து கணக்கெடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இவருக்கு தெரிந்த புள்ளி விவரங்கள் ஊழியக்காரர்களுக்கு நிச்சயம் தெரியும். அப்படியென்றால் சபைகளில் இத்தகய பாவத்தை கண்டித்து உணர்த்தாமல் சாதியத்துக்கு மறைமுகமாக ஒத்த வேஷம் தரித்து மாய்மலம் பண்ணுவது ஏன்?

 

மேலும் இதை பற்றி ஒரு ஊழியக்காரரும் சபைகளில் பேசுவதில்லை. ஏன் தெரியுமா?  இத்தகய ஊழியக்காரர்கள் எண்ணிக்கைக்காகவும் அதன் மூலமாக வரும் காணிக்கைக்காகவும் ஊழியம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

ஜனங்களின் தவறுகளை பாவங்களை கண்டித்து உணர்த்தாமல் அவர்களை நரகத்துக்கு நேராக நடத்தும் குருடர்கள்.மேலும்,  ஊழியம் செய்கிற இவர்களே சாதிய உணர்வுகளுக்கு அடிமையாக இருப்பது தான்.

 

 அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.  மத்தேயு 15-14

 

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்கிற எவரும் சாதி பார்க்க மாட்டார்கள். உன்னை போல பிறனை நேசி என்கிற கற்பனைக்கு கீழ்ப்படியாதவர்கள். நாமும் ஒரு காலத்தில் அடிமைத்தனத்திலிருந்தோம் இப்போது விடுதலை பெற்றிருக்கிறோம். அப்படி விடுதலையான நாம் ஒரே இரத்தத்தினாலே மீட்கப்பட்டு ஒரே ஆவியினாலே தாகம் தீர்க்க பட்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது விக்கிரகத்தின் அடிமைத்தனமான சாதியை கொண்டு,நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் நீ தீண்டதகாதவன் என்று இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தால் தேவன் எப்படி செவிக்கொடுப்பார்.

 

 

ஆமேன்.

bottom of page