top of page

செத்த பிறகு பிணத்தை அடக்கம் பண்ணுவதில் கூட

சாதி பார்க்கும் இரக்கமில்லாத மாயமாலமானவர்கள்

 

 

இன்றைக்கு பல ஊழியக்காரர்கள் வேறு சாதியை சேர்ந்த ஊழியக்காரர்களை தாங்கள் நடத்தும் ஊழியங்களில் பயன்படுத்துவதில்லை.எனவே சபைகளில் தலைமை பொறுப்புகளில் இருக்கும் ஊழியக்காரர்களே உங்கள் நிலையை தயவு செய்து மாற்றி கொள்வீர்களா?

 

ஊழியத்தில் ஜாதி பார்க்காமல் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தி எல்லாருக்கும் முன்னுதாரணமாக இருங்கள்.இன்றைக்கு இவர் நம்ம ஆள் என்று சொல்லும் நீங்கள் அடுத்தவர்களை இவர் அந்த சாதியை சேர்ந்தவர் என்று சொல்வது ஊழியம் செய்கிற உங்களுக்கு அருவருப்பாக இல்லையா?இந்துத்துவாவில் உள்ள தீண்டாமையை நீங்களும் தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் கடைபிடிக்கிறீர்களே?

 

இந்த ஜாதி என்கிற மார்க்க பேதகத்தை பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு ஊழியக்காரர்களுக்கும் உணர்த்தியும் சாதி வெறியில் ஊறி போய் நாற்றமடித்து கொண்டிருக்கும் சபை மக்களுக்கு முன்பாக வாயை மூடி கொண்டு அதே சேற்றில் தானும் புரண்டு கொண்டிருக்கும் மாயமாலமான ஊழியக்காரர்களே சந்திப்பின் நாளிலே உங்கள் பிரித்தாளும் சாதி வெறி என்ற மார்க்கபேதத்துக்காக தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். நாம் புறஜாதி ஜனங்களுக்கு முன்பாக யோக்கியமாக நடந்து காலத்தை பிரயோஜனப்படுத்தி கொள்ள வேண்டும்.இனி காலம் செல்லாது. இன்றைக்கு புற மதத்தினர் இரட்சிக்கபடுவதற்கு நம்மிடத்தில் காணப்படுகிற ஜாதி வெறி தடையாக இருக்கிறது.இந்த ஜாதி வெறி ஊழியக்காரர்கள் மட்டத்தில் அதிகமாகவே இருக்கிறது.

 

ஜாதி என்பது இந்து மதத்தின் அடிப்படை கொள்ளை.அதை எந்த கிறிஸ்தவனும் அனுசரிக்கவோ பின்பற்றவோ கூடாது.மற்றவர்களுக்கு போதிக்கிற ஒவ்வொரு ஊழியக்காரனும் தன்னை சுய பரி சோதனை பண்ணி கொள்வது நல்லது.ஏனென்றால் ஜாதி பார்த்து பிறரை துச்சமாக எண்ணுகிற நாம் எப்படி பரலோகம் போவோம்.ஜாதி என்கிற கீழ்த்தரமான பிறரை அடிமைப்படுத்தும் இந்துத்துவா கொள்கையில் வீழ்ந்து கிடக்கும் முன்னணி ஊழியக்காரர்கள் பலர் இருக்கிறார்கள்.

 

இவர்களின் திருமணங்கள் எல்லாம் சாதி பார்த்து தான் நடைபெறுகிறது. ஊருக்கு உபதேசிக்கிற இவர்கள் மனம் திரும்ப தயவு செய்து ஜெபியுங்கள்.

 

பிசாசு பிசாசு என்று சத்தமிடும் போதகர்கள் சாதி பார்ப்பது என்ற பிசாசின் பிரித்தாளும் வஞ்சகத்துக்கு எதிராக குரல் கொடுப்பதிலை.

 

இது இந்துத்துவாவின் மனு தர்ம கொள்கை அதை கடை  பிடித்தால் மறைமுகமாக இந்துத்துவா கொள்கைகளை பின்பற்றுகிறீர்கள் என்ற அறிவு கூட இவர்களிடம் இல்லை.எனவே சாதி பார்ப்பது தவறு மேலும் இது உன்னை போல பிறனை நேசி என்ற இயேசுவின் உபதேசத்துக்கு எதிரானது என்று சபையில் சொல்வார்களா? சொல்ல மாட்டார்கள்.இவர்கள் தேவனுக்கு பயப்படுவதை விட சபையில் இருக்கும் சாதி வெறியருக்கு பயப்படுகிறார்கள். இவர்களே சாதியத்துக்கு அடிமையாகி விட்டார்கள்.

 

இவர்களே தங்கள் பிள்ளைகளுக்கு சாதி பார்த்து தான் திருமணம் செய்கிறார்கள்.இவர்கள் குருடருக்கு வழி காட்டும் குருடர்கள்.எழுப்புதலுக்கு இவர்கள் தான் முதல் எதிரிகள்.அநேக புற மதத்தவர்கள் கிறிஸ்துவை ஏற்று கொள்ளாததற்கு இவர்கள் தான் காரணம்.

எழுப்புதலுக்கும் சுவிசேஷத்துக்கும் இடறலுண்டாக்குகிறவர்கள் இவர்கள் தான்.

 

இன்றைக்கு 90% ஊழியக்காரர்கள் சாதி பார்க்கின்றனர். சபைகளில் காணப்படும் சாதி வெறிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம்.சபைகளில் தங்கள் பாரம்பரிய சட்டங்களை ஜனங்கள் மேல் வைராக்கியமாக திணிக்கும் இவர்கள் இந்து மனு தர்மத்தின் அடிப்படையான சாதி தவறானது என்று சபையில் சொல்வதில்லை.

 

கிறிஸ்தவர்கள் மதம் மாறினாலும் அவர்கள் சாதி பார்ப்பதால் இன்றும் நம்மவர்களாகவே இருக்கிறார்கள். மேலும் சாதியத்தை கடைபிடிப்பதால் அவர்கள் இந்துக்களாகவே இருக்கிறார்கள் என்று காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னார்.நாம் வெட்கபட வேண்டிய விஷயம்.இந்து மனுதர்மத்தின் சாதி பிரிவினைகளுக்கு கிறிஸ்தவம் அடிமையாக இருப்பதற்கு முழுக்க முழுக்க பாவத்தை கண்டித்துணர்த்தாத  ஊழியக்காரர்கள் தான் காரணம்.சாதி பார்க்கிற இவர்களும் சபை ஜனங்களும் மனம் திரும்புவதற்காக ஜெபியுங்கள்.

 

வரதட்சணை வாங்குவது கொடுப்பது நாட்டு சட்டப்படி குற்றம்.இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் வரதட்சணை பணத்தை ஆசீர்வதித்து ஜெபம் பண்ண போகிறார்கள். அதே மாதிரி தான் இந்த சாதி என்ற கீழ்தரமான மார்க்கபேதத்துக்கு எதிராக சபையில் பேசுவதில்லை.

இன்றைக்கு சபை ஜனங்கள் சாதி பார்ப்பதற்கு நாம் தானே காரணம் என்ற உணர்வு இவர்களிடம் கொஞ்சம் கூட இல்லை.

ஊழியக்காரர்களே...இனியாவது  சாதி பார்க்க மாட்டோம் என்று தீர்மானம் எடுங்கள்  

சபையில் யாரும் சாதி பார்க்க கூடாது என்று கண்டித்து உணர்த்துங்கள். நீங்கள் கண்டித்து உணர்த்தாத வரை சபையில் இருக்கும் சாதி வெறியர்கள் மனம் திரும்பமாட்டார்கள்.அவர்களும் பரலோகம் போக மாட்டார்கள்.நீங்களும் பரலோகம் போக மாட்டீர்கள்.

சபை போதகர்களே, விசுவாசிகளே, மூப்பர்களே..... கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து இந்த உலகத்துக்கு வந்து  குப்பையிலிருந்து உங்களை தூக்கி எடுத்து பரலோக ராஜியத்தை கொடுத்தார். ஆனால் நீங்களோ நாங்கள் தான் பெரியவர்கள் என்று எண்ணி கொண்டு சபையின் ஒருமனம் மற்றும் ஐக்கியத்துக்கு எதிராக சாதி என்ற பெயரில் தனி கல்லறை தனி சபை வைத்து கொண்டு தேவனுக்கு விரோதமாக இரண்டகம் பண்ணாதீர்கள். நீங்கள் சாதி என்ற பெயரில் தனி கல்லறை தோட்டம் வைத்து கொண்டு மற்ற பிரிவினரை புறம்பே தள்ளும் போது நீங்களும்  புறம்பே தள்ளப்படுவீர்கள். செத்த பிறகு கூட பிணத்தை அடக்கம் பண்ணுவதில் கூட சாதி பார்க்கிறீர்களா?

நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை அறுப்பீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு எப்படி அளக்கிறீர்களோ அப்படியே உங்களுக்கும் அளக்கப்படும். ஜனங்களை சாதி என்கிற பெயரில் அற்பமாக எண்ணி பிரித்தாளும் உங்கள் கிரியைகளுக்கேற்ற பலன் உங்கள் மேல் நிச்சயம் வரும், அமேன்.

bottom of page