top of page

அடிமைதனத்தில் அநேக சபைகள்

 


இன்றைக்கு பல சபைகளில் ஆட்டு மந்தைகளை போல  ஜனங்களை அடைத்து வைத்து எண்ணிக்கையை காட்டினாலும் ஊழியக்காரர்கள் பரலோகத்துக்கு போகும் இடுக்கமான வாசலை விசாலமாகவே வைத்திருக்கிறார்கள்.
 

சிலர் மாத்திரமே தேவனுடைய கட்டளைகளுக்கு பயந்து மேலானவைகளை தேடுகிறார்கள்.பல சபைகளின் ஊழியக்காரர்களுக்கு தரம் தேவையில்லை.
 

எண்ணிக்கையும் வருமானமும் முக்கியமாக இருக்கிறது.சில சபைகள் கிறிஸ்துவை தலையாக கொண்டு ஜனங்களை தேவனோடு இணைத்து அவர்களை நித்திய ஜீவனுக்காக ஆயத்தப்படுத்துகிறார்கள்.அவர்கள் ஜனங்களை சுவிசேஷம் அறிவிக்கவும் தேவனுடைய ஊழியத்தை செய்யவும் பயிற்சி கொடுத்து ஊழியம் செய்ய அனுப்புகிறார்கள்.
 

இன்றைக்கும் உண்மையும் உத்தமுமான ஊழியக்காரர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை கிறிஸ்துவை தலையாக வைத்திருக்கும் சபைகளில் இருக்கிறது.இங்கு தான் பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயதீர்ப்பை குறித்தும் வைராக்கியமாக போதிக்கபடுகிறது. இங்கு தான் ஜனங்கள் பக்தி விருத்தியடைகிறார்கள்.இங்குள்ள ஜனங்கள் தேவனுடைய வெளிச்சத்தில் நடக்கிறார்கள். இவர்கள்இயேசுவின் சாயலை பெற்று கொண்டு உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறார்கள்.இவர்கள் தான் நித்திய வழிகளை அறிகிறார்கள்.

 

இன்றைக்கு அநேகர் தங்களை கிறிஸ்துவின்  ஊழியக்காரர்கள் என்று தங்களை அழைத்து கொண்டாலும் அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் இல்லை!! அநேகர் தங்கள் ஸ்தாபனத்தின் சட்ட திட்டங்களிலும் உலக காரியங்களிலும்  ஊறிய ஊழியக்காரர்களாக இருக்கிறார்கள். மேலோட்டமாய் அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் என்று சொன்னாலும் தங்கள் ஸ்தாபனத்தின் சட்டதிட்டங்களுக்கும்,உலகத்துக்கும் இந்துத்துவா கொள்கைகளுக்கும் அடிமையாகிறார்கள்.

 

ஒருமுறை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிருபா என்கிற பெயரில்  தொடங்கும் ஒரு பெரிய ஸ்தாபனத்தின் சபையின் முக்கிய மூத்த போதகர்  மற்றொரு இளம் ஊழியக்காரரிடம் என் மகளுக்கு நம்ம சாதியிலிருந்து ஒரு பெண் பாருங்கள் என்றாராம். அதை கேட்ட அந்த இளம் ஊழியக்காரர் அதிர்ச்சியடைந்து ஐயா நீங்களே சாதி பார்க்கலாமா என்று , கேட்க அவர் சாதியம் எல்லாம் நம் முன்னோர்கள் உருவாக்கியது.மேலும் வேறு சாதியில் பெண் பார்த்தால் வீட்டில் பிரச்சனை வந்து விடும் என்றாராம்.வீட்டில் உள்ளவர்களை சத்தியத்தில் நடத்தாத இவர் எப்படி தன் சபை ஜனங்களை பரலோகம் கொண்டு சேர்ப்பார்.சாதியம் பிரம்மாவின் உடலில் இருந்து பிறந்தது என்கிற இந்துத்துவாவின் கொள்கையை பின்பற்றும் ஊழியக்காரர்களே நீங்கள் பிரம்மாவின் சிலையை வீட்டில் வைத்து வணங்கலாமே.
 

ஆழ்ந்த சத்தியத்தை போதிக்கிறோம் வசனத்தை வியாக்கியானம் பண்ணுகிறோம் என்று தங்களை ஆவிக்குறியவர்கள் என்று சொல்லி கொண்டு தங்களை தாங்களே ஏமாற்றி கொண்டிருக்கும் ஊழியக்காரர்களே இந்த கடைசி நாள்களில் சாதியம் என்ற மார்க்க பேதங்கள் என்கிற ஜனங்களை பிரித்தாளும் அடிமைதனத்தை விட்டு வெளியே வாருங்கள்.சாதி என்கிற விக்கிரகத்தின் ஆணி வேறினால் சபையில் இருப்பவர்கள் ஆளுகை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 

மற்றொரு  ஸ்தாபனத்தில் தண்ணீர் ஞானஸ்நானம் தேவையில்லை என்று போதிக்கப்பட்டு ஞானஸ்நானம் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஞானஸ்நானம் தேவையில்லை என்று  சில வசனங்களை கொண்டு ஜனங்களை சத்தியத்துக்கு கீழ்படியாமல் செய்கிறார்கள்.தங்கள் ஸ்தாபனத்தின் கொடியின் கீழ் பிரதிட்சை செய்வதை ஞானஸ்நானம் என்கிறார்கள். இவர்களது தலைமையகம் இங்கிலாந்து தேசத்தில் இருக்கிறது.அவர்கள் சொல்வதை தான்  இவர்கள் கேட்கிறார்கள்.

 

அந்த ஸ்தாபனத்தின் ஊழியக்காரர்கள் 90 சதவிகிதத்துக்கு மேல் தண்ணீர் முழுகி ஞானஸ்நானம் எடுத்து விட்டார்கள்.அவர்கள் குடும்பத்தினரும் அதாவது மனைவி பிள்ளைகள் கூட ஆவிக்குறிய சபைகளில்  ஞானஸ்நானம் பெற்றுவிட்டார்கள். ஆனால் அவர்கள் தங்கள் சபையில் இந்த சத்தியத்தை சொல்லுவதில்லை. எனென்றால் சபையில் ஞானஸ்நானம் என்கிற சத்தியத்தை பிரசங்கித்தால் இவர்கள் மேல் நடவடிக்கை வரும்.சபை ஸ்தாபனத்தின் சட்ட திட்டங்களை மீறினால்  இவர்களுடைய வேலை பறிபோய்விடும்.இயேசுவின் கட்டளைகளை மீறினால் பரலோகத்துக்கு பிரவேசிக்க முடியாது என்பது பற்றின பயம் இவர்களுக்கு இல்லை.
 

இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் சத்தியத்துக்கு கீழ்படியாதபடிக்கு சபையின் அடிமைத்தனத்தில்  இருக்கிறார்கள். அதாவது இவர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். வசனம் தெளிவாக சொல்கிறது.... விசுவாசமுள்ளவனாயிகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.மாற்கு 16-16. மேலும், மத்தேயு 28-19 ல் சொல்லப்பட்ட ஞானஸ்நானம் என்கிற இயேசுவின் கட்டளையை அதாவது இயேசுவின் அடிசுவடை பின்பற்றி அழைக்கபட்ட ஒருவன் எப்படி அவர் உபதேசத்தை புறக்கணிக்க முடியும். ஒருவன் என் மேல் அன்பு கூர்ந்தால் என் கட்டளைக்கு கீழ்படிவான்.என்று இயேசு சொன்னார்.
 

இயேசுவை நேசிக்கிறேன் என்று சொல்லி கொண்டு அவரது உபதேசத்தை புறக்கணிப்பது மாயமாலம் தானே.

 

இயேசுவின் ஊழியக்காரர்கள் என்று சொல்லி கொண்டு இயேசுவின் கட்டளைக்கு  எதிராக பேசுகிறவர்கள் கள்ள போதகர்கள் தானே.சத்தியத்தில் நடத்தாத படி ஜனங்களை தங்கள் ஸ்தாபன கொள்கைகளினால் தடுப்பது வஞ்சகம் தானே.எவ்வளவு படித்தவர்கள் இங்கு இருந்தாலும் இவர்களால் வசனத்தின் ஆழங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.

 

இயேசு கிறிஸ்து சொன்னார் என்னை தள்ளி என் வசனத்தை ஏற்றுக் கொள்ளாதவனை நியாயம் தீர்க்க தோன்றியிருக்கிறது நான் சொன்ன வசனமே கடைசி நாள்களில் நியாயம் தீர்க்கும்.யோவான் 12-48

 

அந்த ஸ்தாபனத்தில் இருப்பவர்கள் சில வசனங்களை கூட்டிக் குறைத்து சொல்லி சத்தியத்துக்கு கீழ்ப்படியாதபடி ஜனங்களை நடத்துகிறார்கள்.

 

அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே கூட்டினால் அவர் உன்னைக் கடிந்து கொள்வார் நீ பொய்யன் ஆவாய் என்று நீதிமொழிகள் 30 வது அதிகாரம் ஆறாவது வசனம் எச்சரிக்கிறது இன்றைக்கு இந்த ஸ்தாபனத்தில் அனேகர் இயேசுவை விட தங்கள் ஸ்தாபனத்தை உருவாக்கியவரை இயேசுவுக்கு பதிலாக உயர்த்தி வைத்திருக்கிறார்கள், இதுவும் ஒரு விக்கிரக ஆராதனை தானே.
 

இவர்களுக்காக ஜெபியுங்கள். இந்த அடிமைதனம் நீங்கி இந்த சபைகளும் சகல சத்தியத்துக்குள்ளும் நடத்தபட வேண்டும்.

 

அடுத்ததாக தனி நபர் சபைகள். இந்த சபைகளின் முன்னோர்கள் வியர்வை சிந்தி கடுமையாக உழைத்து உண்மையும் உத்தமுமாக ஊழியம் செய்து சபையை வளர்த்து அநேகரை இரட்சிப்புக்குள்ளாக நடத்தினார்கள்.அவர்கள் ஒருகாலும் உலக காரியங்களை சபைக்குள் அனுமதிக்கவில்லை.
 

ஆனால் இப்பொழுது அவர்களுடைய பிள்ளைகள் அந்த சபையை எடுத்து லட்சக்கணக்கான பணத்தை செலவழித்து  ஊழியங்களையும் சபையையும் ஆடம்பரமாக்கி விட்டார்கள். இவர்கள் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்து சபையை உலகத்துக்கு கொண்டு போய்விட்டார்கள். இன்றைக்கு அவர்கள் தான் ராஜாவாக அந்த சபையை ஆளுகிறார்கள். முழு சபையும் குடும்பத்தினரின் கைக்குள் அடங்கி விட்டது.யாரும் கேள்வி கேட்க முடியாது. இருமாப்பாய் சபையை ஆளுகிறார்கள். இவர்கள் தேவனை விட தங்களையே உயர்த்தி கொள்கிறார்கள். இவர்கள் அவர்களுடைய பிள்ளைகளை சினிமா நடிகர்களை போல உடையணிந்து  பிரசங்க மேடையில் ஆராதனை என்ற பெயரில் நடனமாட வைத்து விட்டார்கள். பிசாசை விரட்ட வேண்டிய யுத்த வீரர்கள் Youth என்கிற பெயரில் பிசாசின் தந்திரத்திற்கு அடிமையாகி போனார்கள்.தேவனை மகிமைபடுத்த வேண்டிய அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் ஹீரோக்களாக வலம் வருகிறார்கள்.இங்குள்ள ஜனங்கள் தேவனோடு இணைக்கப்படாமல் ஊழியக்காரரோடு இணைக்கபட்டிருக்கிறார்கள். ஊழியக்காரர்கள் தான் இவர்களுடைய ஹீரோக்கள்.இயேசுவோ ஊழியக்கரனை அப்பிரயோஜனமான ஊழியக்காரன் என்று சொல்ல சொன்னார்.

 

இன்றைக்கு இத்தகய சபைகளில் விசுவாசிகள் இருபது முப்பது வருடங்களாக தேவனோடு இணைக்கப்படாமல் அடிமைகளாகவே இருக்கிறார்கள்.இவர்கள் சுபாவங்களிலோ செயல்களிலோ ஒரு மாற்றமில்லை.சபை ஒரு பொழுது போக்கும் ஸ்தலம் அல்ல.பாவம் கழுவி மனம் திரும்பி தேவனிடம் சேரக்கூடிய இடம்.சத்தியத்தில் ஊன்ற கட்டபடுகிற ஒரு இடம்.

 

பல பெயர் கிறிஸ்தவ சபைகளில் அரசியல்வாதிகளும் குடி காரர்களும் வேசித்தனம் செய்கிறவர்களும் சபையின் ஆளுகைக்குள் வந்து விட்டனர்.பாழாக்கும் அருவருப்பு சபைகளுக்குள்ளே வந்து விட்டது.சத்தியம் சத்தியமாக போதிக்கபடுவதில்லை.மூப்பர்கள் குடிகாரர்களாகவும் பண ஆசை உடையவர்களாகவும் வேசித்தனம் பண்ணுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

 

உலகம் முழுவதும் பரம்பியுள்ள ஒரு பழைய பெந்தேகோஸ்தே பாரம்பரிய சபைக்கு  போகும் ஒரு வயதான சகோதரி விழுப்புரம் கிராமத்தில் வல்லமையாக சுவிசேஷம் அறிவித்து அநேகரை கிறிஸ்துவுக்குள் நடத்துகிறார்கள்.இதையறிந்த அந்த சபையினர் இவரை சபையை விட்டு புறம்பாக்கி விட்டனர்.ஏனென்றால் அங்கு ஊழியக்காரர்கள் மாத்திரமே ஊழியம் செய்ய வேண்டும் என்கிற சட்ட திட்டம்.ஆனாலும் அவர்கள் சோர்ந்து போகாமல் தன்னால் இரட்சிக்கப்பட்ட ஜனங்களை அதே சபைக்கே அனுப்பி வைக்கிறார்கள்.
 

இன்றைக்கு ஊழியக்காரர்கள் சபை ஜனங்களை ஊழியம் செய்ய அனுமதிப்பதில்லை.பல வருடங்களாக அடிமைகளாகவே வைத்திருக்கிறார்கள். பல சபைகளில் ஜனங்களின் கோணலான வழிகள் செவ்வைபடுத்தபடாமல் தேவனுடைய நித்திய வழிகளை காணமுடியாத குருடர்களாகவே இருக்கிறார்கள்.
 

இவர்களை நடத்துகிறவர்களும் குருடர்களே! ஆக மொத்தம் குருடருக்கு வழிக்காட்டும் குருடர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் மனக்கண்கள் குருடாக்கபட்டே இருக்கிறது, சத்தியத்தையும் அறியவில்லை விடுதலையையும் பெறவில்லை. ஆனால் இவர்கள் சொல்வது நாங்கள் ஆழ்ந்த சத்தியத்தினால் போதிக்கபடுகிறோம் என்று தங்களை தாங்களே மேன்மை படுத்தி கொள்கிறார்கள்.பலருடைய சுபாவங்கள் புற மதத்தினருடைய சுபாவங்களை விட தரம் தாழ்ந்த நிலையிலே இருக்கிறது.ஆனால் இவர்களோ நாங்கள் தான் பரலோகம் போவோம் என்று சொல்லி கொள்கிறார்கள்.
 

சபைகளில் சுவிசேஷகர்கள், அப்போஸ்தலர்கள்,தீர்க்கதரிசிகள் எழும்புவதை ஊழியக்காரர்களும் ஸ்தாபன சட்ட திட்டங்களும் தடை செய்கின்றன.ஒரு நாள் இவர்களெல்லாரும் தாங்கள் செய்த ஊழியத்தை குறித்து தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை மறந்து போய் மாம்சமும் மனசும் விரும்பினதை செய்கிறார்கள்.

 

போன வருடம் சபைகள் பல மாதங்களாக அடைக்கப்பட்டது.மீண்டும் திறக்கபட்ட போது யாரும் மனம் திரும்பவில்லை.செய்த தவறையே திரும்ப செய்தார்கள்.

இப்பொழுது மீண்டுமாய் சபைகள் அடைக்கப்பட்டிருக்கிறது.இப்பொழுது வீடுகள் தோறும்  ஆராதனை சத்தம் கேட்கிறது. குடும்பம் குடும்பமாக தேவனை ஆராதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.தெரு தோறும் சின்ன சின்ன கூடுகைகள் உருவாகிவிட்டன.ஜனங்கள் எந்த தடையுமில்லாமல் சுவிசேஷம் அறிவிக்கிறார்கள்.வீடுகள் தோறும் அப்பம் பிட்கும் காலம் வந்து விட்டது.

 

இனி மேல் சபைகள் திறக்கப்பட்டால் சபைகள் மனம் திரும்ப வேண்டும்.எந்த நோக்கத்துக்காக சபைகள் உருவாக்கபட்டதோ அந்த நோக்கம் அதாவது தேவனுடைய சித்தம் சபைகளில் நிறைவேற்றப்பட வேண்டும்.இல்லையென்றால் வீடுகள் தோறும் அப்பம் பிட்கும் காலம் வரும்.விசுவாசிகளால் அற்புத அடையாளங்கள் நடைப்பெறும்.விசுவாசிகள் திரளாய் எழும்பி ஊழியம் செய்வார்கள்.
 

 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.  மாற்கு 16:17,18

 

மேல் சொல்லப்பட்ட விசுவாசிக்கிறவர்களாகிய சாதாரண ஜனங்களால் நடக்கும் அற்புத அடையாளங்கள் என்கிற தீர்க்கதரிசனம் நிச்சயம் நிறைவேறும்.  ஆமென்

bottom of page